போயஸ் கார்டனுக்கு நெருக்கமான சேகர் ரெட்டி வீட்டுக்கு சீல்... ஐ.டி. அதிரடி !
போயஸ் கார்டனுக்கு நெருக்கமான சேகர் ரெட்டி வீட்டிற்கு வருமான வரித்துறையினர் சீல் வைத்தனர்.
வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள சேகர் ரெட்டி வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சென்னையில் இன்று காலை முதல் 8 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். போயஸ் கார்டனுக்கு நெருக்கமான கான்டிராக்டர் சேகர் ரெட்டி, அவரது உறவினர் சீனுவாச ரெட்டி ஆகியோரது வீடு, அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்றது.
தி.நகர் மற்றும் அண்ணா நகர் பகுதிகளில் இந்த சோதனை நடைபெற்றது. இச்சோதனையில் ரூ90 கோடி ரொக்கம் மற்றும் 100 கிலோ தங்கம் சிக்கியது. இதில் ரூ70 கோடிக்கு புதிய ரூ2,000 நோட்டுகளும் பிடிபட்டன. மேலும் சேகர் ரெட்டியின் ஆடிட்டர் பிரேம் என்பவர் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.
இந்த நிலையில் சேகர் ரெட்டிக்கு சொந்தமாக காட்பாடி, காந்தி நகர் 10-வது தெருவில் உள்ள வீட்டில் இன்று மாலை வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். சேகர் ரெட்டி வீட்டில் யாரும் இல்லாததால் வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டது. வீட்டை வருமான வரித்துறை கூடுதல் இயக்குனர் முருகபூபதி தலைமையிலான அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும் சென்னையில் உள்ள சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை தொடர்ந்து நடக்கிறது. போயஸ் கார்டனுக்கு மிக நெருக்கமான கான்டிராக்டர் சேகர் ரெட்டி என்பது குறிப்பிடத்தக்கது.