ஓட்டுக்கு பணம் தருவது பற்றி தகவல் கொடுத்தால் பரிசு: வருமானவரித்துறை
சென்னை: அளவுக்கு அதிகமாக பணம் கொண்டு செல்பவர்கள் குறித்து முறையாக. தகவல் தருபவர்களுக்கு உரிய பரிசு வழங்கப்படும் என வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வருமானவரித்துறை முதன்மை ஆணையர் எஸ்.ரவி, வருமானவரித்துறையின் புலனாய்வுதுறை இயக்குனர் ஜெனரல் டி.ஜெயசங்கர் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது:
லோக்சபா தேர்தல் உண்மையாகவும், நேர்மையாகவும் நடத்தப்படுவதற்காக தேர்தல் ஆணையத்திற்கு வருமானவரித்துறை சில வழிமுறைகளை வகுத்து உதவி செய்து வருகிறது.
இதன் மூலம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓட்டு போடுவதற்காக வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பணம் கொண்டு செல்லப்படுவது தீவிரமாக கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வாரம் 7 நாளும் 24 மணிநேரம் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டு உள்ளது. மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடனும் வருமானவரித்துறை அதிகாரிகள் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
அளவுக்கு அதிகமாக பணம் கொண்டு செல்பவர்கள் குறித்து முறையாக தகவல் அளிக்கலாம். தகவல் அளிப்பவர்கள் பெயர், முகவரிகள் ரகசியமாக வைக்கப்படும். வருமானவரி சட்டத்தின் கீழ் தகவல் தருபவர்களுக்கு உரிய பரிசும் வழங்கப்படும்.
தகவல் தருபவர்கள் கட்டணம் இல்லாத தொலைபேசி எண் 1800 425 6669 என்ற எண்ணிலும், பேக்ஸ் எண் 044- 282 536 59 மற்றும் இ.மெயில் [email protected] என்ற முகவரியிலும் தகவல் தரலாம். முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணத்தை பொறுத்தவரை தேர்தல் நடத்தை விதிகளின்படியோ அல்லது வருமானவரி சட்டத்தின்படியோ நடவடிக்கை எடுக்கப்படும்.
வியாபாரிகள், தங்க விற்பனையாளர்கள், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் விற்பனை ரசீது போன்ற தகுந்த ஆவணங்களின் துணையுடன் பணத்தை கொண்டு செல்வதில் எந்த தடங்கலும் இல்லை. கணக்கில் வராத பணத்தை பிடிக்கவே வருமானவரித்துறை ஈடுபட்டுள்ளது.
குறிப்பாக கடந்த 19-ந்தேதி ரூ.51 லட்சமும், சென்னை விமான நிலையத்தில் ரூ.19 லட்சம் மதிப்பிலான தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாநிலத்தில் உள்ள அனைத்து விமானநிலையங்கள், முக்கிய
ரயில் நிலையங்கள், ஹோட்டல், பண்ணை வீடுகள், ஹவாலா ஏஜென்சிகள், பண புரோக்கர்கள், கூரியரில் வரும் பணம், அடகுகடைகள் மற்றும் பல்வேறு சந்தேகப்படும் ஏஜென்சிகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
நடப்பாண்டுக்கான வருமானவரி படிவம் வரும் 31-ந்தேதிக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும். இதற்காக வரும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமைகளில் வங்கி மற்றும் வருமானவரித்துறை அலுவலகங்கள் செயல்படுகின்றன. வருமானவரி கட்டாதவர்களுக்கு இது கடைசி வாய்ப்பாகும்.
அதிக மதிப்புடைய பொருள்கள் வாங்குவது, அதிக பணம் சேமிப்பு கணக்கில் செலுத்துவது, ரூ.5 லட்சத்திற்கு மேல் தங்கம் வாங்குபவர்கள், ரூ.30 லட்சத்துக்கு மேல் முதலீடு செய்பவர்கள் குறித்து பதிவுதுறை மற்றும் வங்கியிலிருந்து வருமானவரித்துறைக்கு தகவல் வந்துவிடும்.
எனவே வரி செலுத்துபவர்கள் முறையாக வரி செலுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். தவறுபவர்களுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்ப உள்ளது. அதற்கு பிறகு நடவடிக்கை கடுமையாகவே இருக்கும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.