ஜெ. சிகிச்சை பெற்ற சி.டியை பல இடங்களில் தேடிய வருமான வரித்துறை அதிகாரிகள்: திவாகரன் 'திடுக்'
ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெற்ற சி.டியை வருமான வரித்துறை அதிகாரிகள் பல இடங்களில் தேடியதாக திவாகரன் கூறியுள்ளார்.
Recommended Video
திருச்சி: அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற சி.டி.யை பல இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தேடியுள்ளதாக சசிகலாவின் சகோதரரர் திவாகரன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக திவாகரன் கூறியதாவது:
ஆந்திரா, கர்நாடகா என வெளி மாநிலங்களில் இருந்துதான் வருமான வரித்துறை அதிகாரிகள் வந்து சோதனை நடத்தினர். அவர்களை பாதுகாத்து பத்திரமாக அனுப்பி வைத்திருக்கிறோம்.
எங்கள் வீட்டில் சி.டி. எதையும் அதிகாரிகள் கேட்கவில்லை. ஆனால் பல இடங்களில் ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெற்ற சி.டியை கேட்டிருக்கிறார்கள்.
ஜெயலலிதா சிகிச்சை பெற்ற சி.டியை விசாரணை கமிஷனில் கொடுப்போம் என தினகரன் கூறியிருந்தார். இதனடிப்படையில்தான் வருமான வரித்துறை அதிகாரிகள் கேட்டிருக்கிறார்கள்.
தமிழகத்தில் தமிழிசை சவுந்தரராஜன் போன்றவர்களை வைத்துக் கொண்டு ஆளுநர் ஆய்வு நடத்துகிறார். அனேகமாக ஆர்.கே நகர் இடைத் தேர்தலில் தமிழிசையை வேட்பாளராக்கி அவரையே முதல்வராகவும் ஆக்கிவிடுவார்கள்.
அடுத்த சட்டசபை தேர்தலில் எடப்பாடி, ஓபிஎஸ் ஆகியோர் பாஜக பக்கம் போய்விடுவார்கள். இவ்வாறு திவாகரன் கூறினார்.