விஜயபாஸ்கரைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை?
விஜயபாஸ்கரைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை: தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் வருமான வரித்துறை விசாரணை நடத்தப்படக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக அரசின் ரூ10,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களைப் பெற்றவர் சேகர் ரெட்டி. இந்த சேகர் ரெட்டிதான் சசிகலா, ஓ. பன்னீர்செல்வம் மற்றும் தமிழக மூத்த அமைச்சர்களுக்கும் பினாமியாக செயல்பட்டவர்.
நிழல் அரசாங்கம்
சேகர் ரெட்டியும் அவரது நண்பர்களும்தான் நிழல் அரசாங்கத்தையே தமிழகத்தில் நடத்தி வந்தனர். ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்புக்குப் பின்னர் சேகர் ரெட்டியையும் அவரது கூட்டாளிகளையும் வருமான வரித்துறை அதிகாரிகள் கூண்டோடு சுற்றி வளைத்தது.
கூண்டோடு கைது
இந்த கும்பலிடம் இருந்து பல கோடி மதிப்பிலான புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் சிக்கின. இதையடுத்து சேகர் ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார், திண்டுக்கல் ரத்னம், புதுக்கோட்டை ராமச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மீண்டும் சேகர் ரெட்டி கைது
சிறைவாசத்துக்குப் பின்னர் ஜாமீனில் வந்த சேகர் ரெட்டி மீண்டும் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் ஆர்கே நகர் தொகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து மீண்டும் வருமான வரித்துறை களமிறங்கியது.
பணப்பட்டுவாடா அம்பலம்
இந்த சோதனையில் ஆர்கே நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு ரூ89 கோடி பணம் பட்டுவாடா செய்யப்பட்டது அம்பலமானது. அத்துடன் ரூ5 கோடி ரொக்கமும் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து விஜயபாஸ்கரிடம் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
எடப்பாடியிடமும் விசாரணை
இந்த நிலையில் விஜயபாஸ்கர் வீட்டில் சிக்கிய ஆவணங்கள் அடிப்படையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடமும் விசாரணை நடைபெறக் கூடும் என வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் அமைச்சர்கள் செங்கோட்டையன் உள்ளிட்டோரும் விசாரணை வளையத்துக்குள் சிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.