ரூ168 கோடி கருப்புப் பணப்பரிமாற்றத்தில் சசிகலா குடும்பத்திற்கு உதவியதா புதுவை லட்சுமி ஜூவல்லர்ஸ் ?
புதுவை லட்சுமி ஜூவல்லர்ஸ் நிறுவனத்தில் நடைபெற்ற சோதனை நிறைவடைந்தது.
புதுச்சேரி : சசிகலா குடும்பத்தினரோடு தொடர்புடைய புதுவை லட்சுமி ஜூவல்லர்ஸ் நிறுவனத்தில் நான்காவது நாளாக இன்றும் நடந்த ரெய்டு நிறைவடைந்தது.
சசிகலா மற்றும் தினகரன் தொடர்புடையவர்களின் வீடுகள், அலுவலகங்கள் என கடந்த வியாழக்கிழமையில் இருந்து 190 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். நான்காவது நாளான இன்று 40க்கும் மேற்பட்ட இடங்களில் காலையில் இருந்து சோதனை நடந்து வந்தது.
அதில் கொடநாடு கர்சன் எஸ்டேட், திருப்பாதிரிப்புலியூரில் உள்ள ஜோதிடர் வீடு, ஜெயா டிவி அலுவலகம் மற்றும் விவேக் ஜெயராமனின் வீடு ஆகிய இடங்கள் அடங்கும். அதோடு புதுவையில் உள்ள லட்சுமி ஜூவல்லர்ஸ் நிறுவனத்திலும் சோதனை நான்காவது நாளாக நீடித்தது.
தற்போது புதுவை லட்சுமி ஜூவல்லர்ஸ் நிறுவனத்தில் சோதனை நிறைவடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்நிறுவனத்தின் உரிமையாளர் நவீன் பாலாஜி என்பவர் சசிகலா மற்றும் தினகரன் குடும்பத்தினரோடு நெருங்கிய தொடர்புடையவர் என்பதும், ரூபாய் 168 கோடிக்கும் அதிகமான கருப்புப் பணத்தைக் கைமாற்ற சசிகலா குடும்பத்தினருக்கு உதவி இருப்பதற்கான ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
லட்சுமி ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் மேலாளர் தென்னரசு என்பவரது வீட்டிலும் ரெய்டு நடந்தது. மேலும், இந்நிறுவனம் புதுச்சேரி அருகே ஓஷன் ஸ்பிரே என்கிற நட்சத்திர விடுதியையும் நடத்தி வருகிறது. அங்கும் சோதனை மேற்கொள்ளப்பட்டு சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன.