கரூர் திமுக நிர்வாகி வீடு, சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் ஐ.டி., பறக்கும் படையினர் ரெய்டு
கரூர்: கரூரில் திமுக நிர்வாகி ஒருவர் வீட்டிலும், சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பிலும் வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் வேளையில் வாக்காளர்களுக்கு கட்சியினர் பணம் அளிப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர், வருமான வரித்துறையினர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி கோடிக் கணக்கான ரொக்கத்தை இதுவரை பறிமுதல் செய்துள்ளனர்.
இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள கட்டளை கிராமத்தில் வசிக்கும் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் ரவியின் வீட்டில் வாக்காளர்களுக்கு அளிக்க பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ரவியின் வீட்டில் சோதனை நடத்தி வருகிறார்கள். இதே போன்று சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள எம்.ஆர்.சி. நகரில் இருக்கும் தனியார் குடியிருப்பு ஒன்றிலும் வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது.
தகவல் கிடைத்த உடன் வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் அந்த குடியிருப்பில் சோதனை செய்து வருகிறார்கள்.