இளவரசி மகன் விவேக் வீட்டில் நடந்த ஐடி ரெய்டு நிறைவு- ஏராளமான ஆவணங்கள் சிக்கின!
இளவரசி மகன் விவேக் ஜெயராமன் வீட்டில் நடந்த ஐ.டி சோதனை நிறைவடைந்தது.
சென்னை: ஜெயா டி.வியை நிர்வகித்து வரும் இளவரசியின் மகன் விவேக் வீட்டில் நடந்து வந்த வருமான வரித்துறை ரெய்டு தற்போது நிறைவடைந்துள்ளது.
சசிகலா மற்றும் தினகரனின் உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்களின் வீடுகள் ,அலுவலகங்கள் என 190 இடங்களில் கடந்த வியாழக்கிழமை காலை 6 மணிக்கு ஒரே நேரத்தில் வருமான வரித்துறயினரின் சோதனை தொடங்கியது. ஜெயா டி.வி அலுவலகம், தினகரன் புதுவை பண்ணை வீடு, திவாகரன் கல்லூரி, இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா வீடு, டாக்டர் வெங்கடேஷ் வீடு, கொடநாடு எஸ்டேட், சசிகலாவின் மிடாஸ் மதுபான ஆலை என அனைத்து இடங்களிலும் ரெய்டு நடந்தது.
ஆவணங்கள் சிக்கின
சுமார் 2,000 அதிகாரிகள் பங்கேற்ற இந்த மிகப்பெரிய ரெய்டு தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த ரெய்டில் ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும், வருமான வரி முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீடித்த சோதனை
இந்நிலையில் இன்றும் நான்காவது நாளாக ஜெயா டி.வி மேலாண் அதிகாரியும், ஜாஸ் சினிமாஸ் உரிமையாளருமான இளவரசி மகன் விவேக் வீட்டில் ரெய்டு தொடர்ந்து நடைபெற்றது. இதில் சத்யம் குழுமத்திடம் இருந்து லக்ஸ் சினிமாஸை ரூ1000கோடிக்கு வாங்கியது எப்படி? சிறிய நிறுவனமான ஜாஸ் சினிமாஸிற்கு ரூ1000 கோடி எங்கிருந்து வந்தது தொடர்பான ஆவணங்கள் சிக்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.
ரெய்டு நிறைவு
மேலும், விவேக் வெளிநாட்டில் செய்துள்ள முதலீட்டிற்கான ஆவணங்களும் கைப்பற்றி இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. தற்போது கோடம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் அமைந்துள்ள விவேக் வீட்டில் அதிகாரிகள் ரெய்டு நிறைவு பெற்றிருக்கிறது.
கருப்பு பண பரிமாற்றம்
அதேபோல புதுவை லட்சுமி ஜூவல்லர்ஸ் நகைக்கடையிலும் நான்கு நாட்களாக நடந்து வந்த வருமான வரித்துறை சோதனையும் நிறைவு பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கருப்புப்பணப் பரிமாற்றத்தில் இவர்கள் சசிகலா குடும்பத்திற்கு உதவியதாக வந்த தகவலில் பேரில் இங்கு சோதனை நடைபெற்றது.