+2: முதலிடம் பெற்ற ஊத்தங்கரை பள்ளி.. தேர்தல் ரெய்டில் ரூ.3.40 கோடி, தங்க நாணயங்கள் பதுக்கி சிக்கியது
சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இன்று வெளியான பிளஸ்டூ தேர்வு முடிவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இப்பள்ளியின் ஆர்த்தி மற்றும் மாணவன் ஜஸ்வந்த் ஆகியோர் 1,200 மதிப்பெண்களுக்கு தலா 1,195 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடத்தை பெற்றுள்ளனர்.
ஆனால் இந்தப் பள்ளி கடந்த ஏப்ரல் மாதம் பெரும் சர்ச்சையில் சிக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 25ம் தேதி இந்தப் பள்ளியில் தேர்தல் பறக்கும் படையைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் கோடிக்கணக்கில் பணமும், தங்க நாணயங்களும் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.
இந்தப் பள்ளியில், தேர்தலின்போது வாக்காளர்களுக்கு வழங்க பணம், நகைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது உத்தரவின்பேரில் 25ம் தேதி காலை ஊத்தங்கரை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயகுமாரி, டிஎஸ்பி பாஸ்கரன், வட்டாட்சியர் அமுதன் ஆகியோர் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, பள்ளி அலுவலகத்தில் ரூ.3,40,45,000 ரொக்கம், தலா ஒரு கிராம் எடையுள்ள 245 தங்க நாணயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பள்ளி நிர்வாகத்துக்குச் சொந்தமான கல்லூரியிலும், தாளாளர் சந்திரசேகரன் அறையிலும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
கிருஷ்ணகிரி, ஓசூரில் இருந்து 2 வாகனங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் வந்து, பள்ளியின் தாளாளர் சந்திரசேகரனிடம் விசாரணை நடத்தினர்.
இந்த சோதனை குறித்து பின்னர் பள்ளி நிர்வாகம் சார்பில் கூறுகையில், பள்ளி, கல்லூரியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு 2 மாதம் சம்பளம் வழங்குவதற்காக பணம் வைக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வு முடிவுகள் வந்தவுடன் நன்றாக பணியாற்றிய ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் தங்க நாணயங்கள் வழங்க வைத்திருந்தோம். பள்ளியின் வளர்ச்சி பிடிக்காத சிலர் தேவையற்ற வதந்திகளை பரப்பி உள்ளனர். பணம், நகைகளுக்கான உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்று விளக்கினர்.
இந்தப் பள்ளிக்கூடத்தைச் சேர்ந்த இரு மாணவ, மாணவியர்தான் தற்போது முதலிடத்தைப் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.