கிறிஸ்டி சத்துணவு நிறுவனத்தில் மூன்றாவது நாளாக தொடரும் ஐடி ரெய்டு
நாமக்கல்லில் கிறிஸ்டி சத்துணவு நிறுவனத்தில் மூன்றாவது நாளாக வருமானவரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது.
நாமக்கல்: சத்துணவு நிறுவனம் கிறிஸ்டி பிரைடு கிராம் இன்டஸ்ட்ரிக்கு சொந்தமான அலுவலகங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் இன்று சனிக்கிழமை மூன்றாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழக அரசின் சத்துணவு திட்டத்துக்கு முட்டை, சத்துமாவு, பருப்பு உள்ளிட்ட பொருட்களை கிறிஸ்டி பிரைடு கிராம் இண்டஸ்ட்ரி என்ற நிறுவனம் விநியோகம் செய்துவருகிறது. இந்த நிறுவனம் மீது வரி ஏய்ப்பு உள்ளிட்ட புகார்கள் தொடர்பாக, இந்த நிறுவனத்தின் அலுவலகங்கள், குடோன், உரிமையாளர் வீடு உள்ளிட்ட இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஆவணங்களும் ரூ.4 கோடியும் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், கிறிஸ்டி பிரைடு கிராம் இண்டஸ்ட்ரி நிறுவனத்தின் நாமக்கல் அலுவலகங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் இன்று சனிக்கிழமை மூன்றாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த சோதனை நடவடிக்கையில் அத்தனூர், புதுச்சத்திரம் பகுதியில் நடந்த சோதனை நிறைவு பெற்றுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.