மத்திய பாஜக அரசு ஊழலற்ற ஆட்சி நடத்தி வருகிறது: அன்புமணி ராமதாஸ் திடீர் பாராட்டு
சேலம்: மத்தியில் பாஜக அரசு ஊழலற்ற ஆட்சி நடத்தி வருகிறது என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சேலத்தில் இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போதே போயஸ் இல்லத்தில் ரெய்டுகளை நடத்தியிருந்தால் முழுமையான விவரங்களை கைப்பற்றியிருக்கலாம்.
சசிகலாவும் அவரது உறவினர்களும் ஊழல் செய்து சொத்து சேர்க்க ஜெயலலிதாதான் காரணம். தமிழக அதிமுக அரசில் நடந்த ஊழல்கள் தொடர்பாக விசாரணை நடத்த விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்.
ஜெயலலிதா வீட்டில் சோதனை நடப்பது ஒன்றும் புதிது கிடையாது என்பதால் அதில் அதிர்ச்சியடைய தேவையில்லை. மத்தியில் பாஜக அரசு ஊழலற்ற ஆட்சி நடத்தி வருகிறது. எனவே, தமிழகத்தில் ஊழல் நடப்பதை மத்திய அரசு பார்த்துக்கொண்டிருக்க கூடாது.
ஊழலை ஒழித்தெடுக்க உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.