கொடநாடு எஸ்டேட், தினகரன் ஜோதிடர் வீட்டில் 3வது நாளாக தொடரும் ஐடி ரெய்டு
தினகரனின் ஜோதிடர் வீட்டிலும் கொடநாடு எஸ்டேட்டிலும் 3வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
கடலூர்: கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள தினகரனின் ஜோதிடர் சந்திரசேகரன் வீட்டில் 3வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
ஜோதிடர் சந்திரசேகரன், தங்கம், சொத்துக்கள் வாங்கி குவித்தது, பங்கு சந்தையில் முதலீடு செய்தது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் கொடநாடு, கர்ஸன் எஸ்டேட்கள் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி உள்ளிட்டோருக்கு சொந்தமானவை. இங்கு 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மூன்றாவது நாளாக சோதனை மேற்கொண்டுள்ளனர்.
புதன்கிழமையன்று உள்ளே நுழைந்ததும் ஊழியர்களின் மொபைல் போன்களை தங்கள் வசப்படுத்தினர். தொலைபேசி இணைப்புகளையும் துண்டித்தனர். அங்குள்ள சிசிடிவி கேமராவின் திசைகளை மாற்றியமைத்து, அதன் பின் எஸ்டேட் பங்களா மற்றும் அலுவலகம் ஆகிய இடங்களில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
ஊழியர்கள் மற்றும் கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் நேற்று 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். இன்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதே போல் புதுச்சேரி அம்பலத்தாடையார் வீதியில் உள்ள லட்சுமி நகைக்கடையில் 3-வது நாளாக வருமான வரி சோதனை நடைபெறுகிறது. லட்சுமி குழுமத்தின் கிளை நிறுவனங்கள், நட்சத்திர விடுதி உள்ளிட்ட இடங்களிலும் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதேபோல போயஸ்கார்டனில் உள்ள பழைய ஜெயாடிவி அலுவலகத்திலும் மூன்றாவது நாளாக சோதனை நடைபெறுகிறது.
கடந்த 2 நாட்களாக நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.