ஜெயா டிவி, கிருஷ்ணப்பிரியா, விவேக் வீடுகளில் 5-வது நாளாக ஐடி ரெய்டு- இன்றும் ஆவணங்கள் சிக்கும்?
ஜெயா டிவி, கிருஷ்ணப்பிரியா-விவேக் வீடுகளில் 5-வது நாளாக இன்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை: ஜெயா டிவி, இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா, இளவரசி மகன் விவேக் வீடுகளில் இன்றும் 5-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சசிகலா குடும்பத்தினர் 355 பேரை இலக்கு வைத்து வியாழக்கிழமை காலை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர். 190 இடங்களில் 2,000 வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இச்சோதனை பல இடங்களில் 3 நாட்கள் நீடித்தன. ஆனால் ஜெயா டிவி, இளவரசி மகன் விவேக், இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா, மிடாஸ் மதுபான ஆலை, கொடநாடு கிரீன் எஸ்டேட் ஆகிய இடங்களில் இந்த சோதனை இன்னமும் முடிவடையவில்லை.
5-வது நாளாக இன்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே விவேக், கிருஷ்ணப்பிரியா வீட்டில் ஏராளமான ஆவணங்கள் சிக்கியுள்ளன. விவேக்கின் வெளிநாட்டு முதலீடு தொடர்பான ஆதாரங்கள், ஜாஸ்சினிமா கைமாறியதற்கான ஆவணங்கள் சிக்கின.
இதேபோல் கிருஷ்ணபிரியா வீட்டிலும் முக்கிய ஆவணங்கள் பிடிபட்டுள்ளன. சசிகலாவின் கொடநாடு கிரீன் டீ எஸ்டேட்டில் ரகசியமாக பதுக்கப்பட்ட ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இன்றைய சோதனையில் மேலும் முக்கிய ஆவணங்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது.