சரத்குமார் வீட்டில் 15 மணி நேர ஐ.டி. ரெய்டு.. முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் !
சரத்குமார் வீட்டில் 15 மணி நேரமாக நடந்து வந்த வருமான வரித் துறை சோதனை நிறைவு பெற்றது.
சென்னை: சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் நடிகருமான சரத்குமார் வீட்டில் காலை 6 மணி முதல் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். 15 மணி நேரமாக நீடித்த இந்த சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமாரின் கொட்டிவாக்கம் இன்று அதிகாலை முதல் வருமானவரித்துறையினரால் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இன்று அதிகாலை 5.30 மணிக்கு சென்னை கொட்டிவாக்கம் கல்யாணி நகரில் உள்ள சரத்குமார் வீட்டில் 5க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். பின்னர் கூடுதலாக 10 வருமான வரித்துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து 15 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடைபெற்றது.
இந்த சோதனையின் போது, கணக்கில் காட்டப்படாத ஏராளமான பணம் சிக்கியதாகவும் கூறப்படுகிறது. நேற்று மாலை திடீரென டி.டி.வி.தினகரனை சரத்குமார் சந்தித்து ஆதரவு கொடுத்ததன் காரணமாக தான் இந்த சோதனை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில்,15 மணிநேரத்திற்கும் மேலாக சரத்குமார் வீட்டில் நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றது. அதேபோல் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 35 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.89 கோடி அளவிற்கு முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.