ஆர்.கே. நகர் பணமழையில் இவர்களுக்கெல்லாம் தொடர்பா? துணைவேந்தர், முன்னாள் எம்பி வீடுகளில் ஐடி ரெய்டு
எம்ஜிஆர் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி முன்னாள் எம்பி சிட்லபாக்கம் ராஜேந்திரன், எம்எல்ஏ விடுதிகளில் வருமானவரித் துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை: ஆர்.கே. நகர் பணப்பட்டுவாடா புகாரை அடுத்து சென்னையில் 20 இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
எம்ஜிஆர் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி முன்னாள் எம்பி சிட்லபாக்கம் ராஜேந்திரன், எம்எல்ஏ விடுதிகளில் வருமானவரித் துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா நடைபெற்றது தொடர்பாக எழுந்த புகாரை அடுத்து சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித் துறை திடீர் சோதனையில் இறங்கியுள்ளது. இன்று அதிகாலை தொடங்கிய சோதனை விறுவிறுப்பாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சென்னையில் மட்டும் பெசண்ட் நகர், விருகம்பாக்கம், நுங்கம்பாக்கம், தியாகராயர் நகர் உள்ளிட்ட 20 இடங்களில் வரிமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், எம்ஜிஆர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமியின் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் ரெய்டு நடப்பதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுதவிர, முன்னாள் எம்பி சிட்லபாக்கம் ராஜேந்திரனின் வீடு மற்றும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்எல்ஏ விடுதிகளிலும் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதே போன்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரின் வீட்டிலும் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் பல திடுக்கிடும் ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.