தனி ஒருவரின் பேராசை!
- பேராசிரியர் சுப வீரபாண்டியன்
இத்தனை மாற்றங்கள் அடுத்தடுத்து இவ்வளவு விரைவில் நடைபெறுவது நல்லதா என்று தெரியவில்லை. 'மோசத்திலிருந்து படு மோசத்திற்கு' நாடு ஓடிக் கொண்டிருப்பது போலத்தான் தெரிகிறது.
மதியம் ஒரு மணி நேரம் தூங்கி எழுவதற்குள் முதலமைச்சரை மாற்றி விடுகின்றனர். மாலை ஒரு கூட்டத்தில் பேசி முடித்து இறங்குவதற்குள், புதியவர் பதவி ஏற்பதில் பல சிக்கல்கள் என்று செய்திகள் கசிகின்றன.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அன்று என்ன நடந்தது என்று இன்று மருத்துவர்கள் கூறுகின்றனர். சசிகலா முதலமைச்சர் பொறுப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் இந்த மருத்துவர் குழு ஊடகங்களை அவசரம் அவசரமாகச் சந்திக்கிறது. நேற்றுவரை காட்சியிலேயே இல்லாத மருத்துவர் சுதா சேஷய்யன், ஜெ.யின் உடல் பதப்படுத்தப் பட்டது உண்மைதான் என்கின்றார். எம்.ஜி.ஆரின் உடலும் அவ்வாறுதான் செய்யப்பட்டதாம் (30 ஆண்டுகளுக்குப் பின் இப்போதுதான் அதனையெல்லாம் சொல்லத் தோன்றுகிறது போலும்!). ஏறத்தாழ 100 நாள்கள் 'ராஜ வைத்தியம்' செய்ததற்கு அப்பல்லோ மருத்துவமனை வெறும் 5.4 கோடிதான் கட்டணமாகப் பெற்றதாம்.
கிராமங்களில், 'எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்று ஒரு பழமொழி சொல்வார்கள். இப்போது அது நம் நினைவுக்கு வந்து தொலைக்கிறது.
சசிகலாவை மக்கள் ஏற்கவில்லை என்பதும், ஜெயலலிதா மரணத்தில் விடுவிக்கப்படாத புதிர்கள் இருப்பதாக மக்கள் கருதுகின்றனர் என்பதும் ஆளும் கட்சிக்குப் புரிந்த பிறகுதான், மருத்துவக் குழு சட்டென்று விழித்துக் கொண்டு, 30 ஆண்டுகளுக்கு முன்னே நடந்ததையெல்லாம் நமக்குச் சொல்கின்றனர். 'சசிகலா குற்றமற்றவர்,நம்புங்கள் மக்களே!' என்று மறைமுகமாகக் கெஞ்சுகின்றனர்.
இது ஒருபுறமிருக்க, இதுதான் நல்ல வாய்ப்பென்று கருதி, மத்தியில் உள்ள பா.ஜ.க. தன் தலையை உள்ளே நுழைக்கிறது. அ.தி.மு.க. தொண்டர்கள் சட்டைப் பைகளில் எல்லாம் தீபாவின் படம்தான் இருக்கிறதாம். ஒவ்வொரு தொண்டரின் சட்டைப் பையையும் தொட்டுத் துழாவிக் கண்டு பிடித்திருக்கிறார் ஹெச்.ராஜா. ஆளுநர் வித்யாசாகர் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுகின்றார். கோவைக்கு வர இருந்த அவர் டெல்லியிலிருந்து நேராக மும்பைக்குப் போகின்றார். பதவிப் பிரமாணம் செய்துகொள்ள சசிகலா குழுவினர் மும்பைக்குப் போனாலும் போவார்கள். ஆசை வெட்கம் அறியாது. அந்த நேரம் பார்த்து ஆளுநர் சென்னைக்கு வந்துவிட வாய்ப்புள்ளது.
பன்னீர்செல்வம் முழு அதிகாரம் உள்ள முதல்வராக இருந்தபோதே எதனையும் தன் விருப்பப்படி செய்ததில்லை. குறைந்தது, நிமிர்ந்து நின்றே அவருக்குப் பல நாள்கள் ஆகிவிட்டன. இப்போது பாதுகாப்பு அமைச்சரவையின் (காபந்து சர்க்கார்) முதல்வர். என்ன வேலை நடக்கப் போகிறது?
தமிழகம் செயலற்று நிலைகுத்தி நிற்கிறது - தனி ஒருவரின் பேராசையால்!