முதல்வர் ஓபிஎஸ் கோட்டையில் இருக்கும்போதே ஐடி ரெய்டு!
முதல்வர் பன்னீர்செல்வம் கோட்டையில் இருக்கும் நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
சென்னை: தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அலுவலகத்தில் இருந்த போதே தலைமைச் செயலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தியுள்ளனர்.
தமிழக அரசின் தலைமை செயலர் ராமமோகன் ராவின் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனைகளில் இதுவரை 44 கிலோ தங்கம் சிக்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதற்காக தலைமை செயலகத்தில் துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 8 கார்களில் வந்த 20 அதிகாரிகள் தலைமைச் செயலகத்தின் 2வது தளத்தில் உள்ள ராமமோகன் ராவின் அறையில் சோதனை நடத்தினர். இச்சோதனை நடந்த போது முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தலைமைச் செயலகத்தில் தம்முடைய அறையில்தான் இருந்தார்.
இந்தியாவிலேயே தலைமை செயலகத்துக்குள் நுழைந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளது இதுவே முதல் முறை. அதுவும் முதல்வர் தம்முடைய அறையில் இருக்கும்போதே வருமான வரித்துறை சோதனை நடத்தியிருப்பதால் தலைமை செயலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.