ஐடியையே ஷாக்காக வைத்த சசிகலா பதில்... சம்மனுக்கு மவுன விரதம் என தந்திரமாக விளக்கம்!
வரி ஏய்ப்பு வழக்கில் வருமான வரித்துறை சசிகலாவிற்கு அனுப்பிய சம்மனுக்கு தான் மவுன விரதத்தில் இருப்பதாக அவர் பதில் எழுதியுள்ளார்.
Recommended Video
சென்னை : வரி ஏய்ப்பு வழக்கில் விளக்கம் கேட்டு வருமான வரித்துறை அனுப்பிய சம்மனுக்கு தான் மவுன விரதம் இருப்பதாக சசிகலா பதில் கடிதம் எழுதி இருக்கிறார். இதனால் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று ஐடி துறையினர் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழகத்தில் சசிகலாவின் சொந்த பந்தங்களை குறி வைத்து ஆபரேஷன் கிளின்மணி என்ற மெகா ரெய்டு அரங்கேறியது. சுமார் 5 நாட்கள் நடைபெற்ற இந்த ரெய்டின் போது சசிகலாவின் அங்காளி பங்காளி முதல் ஜோசியர் வரை என அனைவரையும் தோண்டித் துருவியது வருமான வரித்துறை.
சசிகலா சிறை செல்லும் முன்னர் தன் பெயரில் இருக்கும் சொத்துகளை நிர்வகிக்கும் பொறுப்பை தனது அண்ணன் மகள் கிருஷ்ணப்ரியாவிடம் ஒப்படைத்து சென்றுள்ளார். இதனால் சசிகலாவின் அண்ணன் வாரிசுகளான கிருஷ்ணப்ரியா, விவேக்கிடம் வருமான வரித்துறையின் லென்ஸ் பார்வை ஆழமாக இருந்தது.
வருமான வரித்துறையின் கிடுக்கிப்பிடி
வருமான வரி சோதனை முடிந்து ஆவணங்களை எடுத்துச் சென்ற அதிகாரிகள் சுமார் 300 பேரை விசாரணைக்கு அழைத்தனர். இதன் தொடர்ச்சியாக போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்தில் சசிகலாவின் அறை, ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனின் அறைகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி பென்டிரைவ், லேப்டாப் மற்றும் மூட்டை மூட்டையான கடிதங்களையும் அள்ளிச் சென்றனர்.
வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு
வருமான வரித்துறையினர் இந்த ஆவணங்களை சரிபார்த்ததில் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் சுமார் ரூ. 4,500 கோடி வருவாய் ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும்
குட்கா லஞ்ச விவகாரத்தில் அமைச்சர், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு வருமான வரித்துறை அனுப்பிய ஆவணங்கள் காணாமல் போனதாகச் சொல்லப்பட்ட நிலையில் வேதா நிலையத்தில் சசிகலா அறையில் நடந்த சோதனையில் குட்கா லஞ்ச புகார் குறித்த ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டன.
வருமான வரித்துறை சம்மன்
இந்த இரண்டு விவகாரங்கள் குறித்தும் சசிகலாவிடம் விளக்கம் கேட்டு வருமான வரித்துறையினர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவிற்கு சம்மன் அனுப்பியுள்ளனர். வருமான வரித்துறையின் கடிதத்திற்கு சிறைத்துறை கண்காணிப்பாளர் மூலம் விளக்கம் அளித்துள்ள சசிகலா தாம் மவுன விரதம் இருப்பதாக பதில் எழுதியுள்ளார்.
சாக்காகிப் போன மவுன விரதம்
ஜெயலலிதா மரண விசாரணைக்கான நீதிபதி ஆறுமுக சாமி கமிஷன், வருமான வரித்துறை என இரண்டு தரப்பின் சம்மனுக்குமே தான் மவுன விரதம் இருப்பதாக பதில் அளித்துள்ளார் சசிகலா. விசாரணைகளில் இருந்து தப்புவதற்காக முன் கூட்டியே போட்ட திட்டமா மவுன விரதம் என்ற சந்தேகம் ஒரு புறம் இருந்தாலும், ஜனவரி 31ம் தேதியுடன் மவுன விரதத்தை சசிகலா முடிப்பார் என்று ஏற்கனவே தினகரன் கூறி இருக்கிறார்.
அதிகாரிகள் அதிர்ச்சி
ஆனால் ஏராளமான வழக்குகளை விசாரித்த வருமான வரித்துறைக்கு சசிகலாவின் பதில் சற்றே ஆச்சரியமாக இருக்கிறது. எனினும் அவரிடம் விசாரித்தால் மட்டுமே இதில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியும் என்பதால் பிப்ரவரி 10ம் தேதி வாக்கில் வருமான வரித்துறையினர் சசிகலாவிடம் விளக்கம் கேட்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.