வாய் கிழியப் பேசி டெபாசிட்டைப் பறி கொடுத்த பாஜக....!
சென்னை: ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் பாஜகவின் நிலைதான் பரிதாபகரமானது. கடைசி நேரத்தில் அத்தனை பேரும் கைவிட்டு விட்ட நிலையில் அது ஏனோதானோவென்று போட்டியிடும் நிலை ஏற்பட்டது.
கடந்த லோக்சபா தேர்தலை பாஜக மெகா கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. மோடி அலை நம்மைக் கரை சேர்க்கும், பல தொகுதிகளை வாரிக் கொடுக்கும் என்று கணக்குப் போட்டது பாஜக. ஆனால் ஆரம்பத்திலிருந்து ஏற்பட்ட பல குழப்பங்கள் காரணமாக கூட்டணிக்கு மரண அடி கிடைத்தது. பாஜகவுக்கு ஒரு சீட்டும், பாமகவுக்கு ஒரு சீட்டும் மட்டுமே கிடைத்தன.
அந்தத் தேர்தலுக்குப் பின்னர் கூட்டணி ஆட்டம் காணத் தொடங்கியது. தேமுதிக ஒரு பக்கம் திரும்பிக் கொண்டது, பாமக மறுபக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டது. மதிமுகவோ கூட்டணியை விட்டு வெளியேறிப் போய் விட்டது.
மதிமுக, பாமக குறித்து பாஜக கவலைப்படவே இல்லை. அதற்குத் தேவை விஜயகாந்ததும், தேமுதிகவும் மட்டுமே. ஆனால் விஜயகாந்த்தோ தன் இஷ்டத்திற்கு பாஜகவை ஆட்டிப்படைக்க முயற்சித்து வருகிறார். அது முழுமையாக நடப்பது போலத் தெரியவில்லை. இதனால் அவரும் கூட விசனத்தில்தான் இருந்து வருகிறார்.
இந்த நிலையில்தான் ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலை பெரிய அளவில் தனக்கு திருப்புமுனையாக அமையப் போகும் தேர்தலாக பார்க்க ஆரம்பித்தது பாஜக. அதற்கு அது விஜயகாந்த்தை மலை போல நம்பியது. ஆனால் பாஜகவின் வெற்றிக்காக நாம் ஏன் போய் வாய் வலிக்க கத்த வேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ பிரசாரத்திற்கே விஜயகாந்த் வரவில்லை. பாஜகவின் முன்னணித் தலைவர்களும் கூட வரவில்லை.
கூடமாட துணைக்கு சிலரை மட்டுமே வைத்துக் கொண்டு அதிமுக மற்றும் திமுகவின் அனல் பறக்கும் பிரசாரத்திற்கு ஈடு கொடுக்கப் பார்த்தது பாஜக. இருப்பினும் அது கூறியபடி எந்த திருப்பத்தையும் அது கொடுக்கவில்லை. மாறாக டெபாசிட்டை திரும்பப் பெற முடியாத அளவுக்குத்தான் வாக்குகளை அது வாங்கியுள்ளது.
கடந்த தேர்தலிலும் கூட அது டெபாசிட்டைப் பறி கொடுத்தது. இந்த முறையும் அது பறி கொடுத்துள்ளது. ஆனால் கடந்த முறையை விட இந்த முறை கூடுதலாக 3000 வாக்குகள் கிடைத்துள்ளது. அது மட்டும்தான் சந்தோஷமான விஷயம் அக்கட்சிக்கு.
கடந்த தேர்தலில் பாஜக வேட்பாளர் அறிவழகன், 2017 வாக்குகளைப் பெற்றார். இந்த முறை சுப்பிரமணியன் 5015 வாக்குகளைப் பெற்றுள்ளார். இது ஆறுதலான விஷயம்தான்.
ஆனால் வரலாறு படைப்போம், சரித்திரம் எழுதுவோம், பூகோளத்தை மாற்றுவோம் என்றெல்லாம் பாஜக தலைவர் தமிழிசை பேசியதுதான் சற்று ஓவர் ஓவர் ஓவர்....!