தலைமைச் செயலகத்தில் வெங்கய்யா ஆய்வு வரவேற்கத்தக்கதுதான்.. சொல்கிறார் தம்பிதுரை!
தலைமைச் செயலகத்தில் மத்திய அமைச்சர் ஆய்வு நடத்தியது வரவேற்கத்தக்கதுதான் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
சென்னை: தலைமைச் செயலகத்தில் மத்திய அமைச்சர் ஆய்வு நடத்தியது வரவேற்கத்தக்கதுதான் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். வெங்கையா நாயுடு ஆய்வு நடத்தியதில் எந்த தவறும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னை கோயம்பேடு-நேரு பூங்கா வரையிலான மெட்ரோ சுரங்க ரயில் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இதனை தொடங்கி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து தலைமைச்செயலகம் சென்ற அமைச்சர் வெங்கையா நாயுடு அங்கு ஆய்வுக்கூட்டம் நடத்தினார். மத்திய அமைச்சர் தலைமைச் செயலகத்தில் ஆய்வு நடத்துவதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பலமுறை பேச்சுவார்த்தை
இந்நிலையில் லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் போக்குவரத்து அமைச்சர் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியதாக அவர் கூறினார்.
பேச்சுவார்த்தை நடத்த தயார்
ஆனால் அதை சில சங்கங்கள் ஏற்று கொள்ளாததால் போராட்டம் உருவாகி இருக்கிறது. போக்குவரத்து அமைச்சர், மீண்டும் தமிழக அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று சொல்லி இருக்கிறார் என்றும் தம்பிதுரை கூறினார்.
பணிக்கு திரும்ப வேண்டும்
தொழிற்சங்கங்கள், தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் தம்பிதுரை கேட்டுக்கொண்டார். தொழிற்சங்கங்களுடனான பேச்சுவார்த்தையை தமிழக அரசு சரியான முறையில் மேற்கொண்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
எந்தவொரு தவறும் இல்லை
மேலும் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு முதல்வரை தலைமை செயலகத்தில் சந்தித்து பேசி அங்கேயே ஆய்வு கூட்டம் நடத்தியதில் எந்தவொரு தவறும் இல்லை என்று அவர் கூறினார். நானும் கூட பல மாநிலத்தின் தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடத்தி இருக்கிறேன், கலந்து கொண்டும் இருக்கிறேன் என்றார். மத்திய மந்திரி ஆய்வு கூட்டம் நடத்தியது வரவேற்கத்தக்கதுதான் என்றும் தம்பிதுரை கூறினார்.