பதற்றம் வேண்டாம்.. பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க காலக்கெடு நீட்டிப்பு
சென்னை: பான் கார்டுடன் ஆதார் அட்டையை இன்றுக்குள் இணைக்காவிட்டாலும் பான்கார்டு ரத்து ஆகாது என மத்திய நேரடி வரி விதிப்பு கழகம் அறிவித்துள்ளது.
பான் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்ற கட்டாய உத்தரவை பிறப்பித்துள்ளது மத்திய அரசு. இன்றுடன் இதற்கான காலக்கெடு நிறைவடைய உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே, ஜூலை 1ம் தேதி முதல் ஆதார் எண் இணைக்கப்படாத பான்கார்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆதார் எண் இன்னும் கிடைக்காதவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்று அறிவித்துள்ளது. ஆனால் இரு எண்களும் வைத்திருப்போர் இன்றுக்குள் அதைச் செய்தாக வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் மக்கள் மத்தியில் கடும் அமளி ஏற்பட்டது. இன்றே இரு அட்டைகளையும் இணைக்க கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்ததால் ஆன்லைனில் மக்கள் குவிந்தனர். இதனால் சர்வர் அதிகமாக லோடு ஆனது.
இருப்பினும் அனைத்து மக்களாலும் இன்றுக்குள் அந்த இணைப்பை செய்ய முடியவில்லை. எனவே இன்றுடன் இரு கார்டுகளையும் இணைக்க வேண்டும் என்ற உத்தரவில் நேரடி வரி விதிப்பு கழகம் சலுகை காட்டியுள்ளது.
ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் ஜூன் 30ம் தேதிக்கு பிறகும் செல்லுபடியாகும் என மத்திய நேரடி வரி விதிப்பு கழகம் இன்று தெரிவித்துள்ளது. ஆதார் எண் - பான் கார்டு இணைப்பிற்கான கடைசி தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"ஆதார் எண் இணைக்கப்படா விட்டாலும் ஜூன் 30க்கு பிறகு பான் கார்டுகள் செல்லும். விரைவில் ஒரு குறிப்பிட்ட தேதி அறிவிக்கப்படும் அந்த தேதி வரையிலும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் செல்லும். அந்த குறிப்பிட்ட தேதிக்கு பிறகும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத பான் கார்டுகளே செல்லாதவையாகவோ அல்லது காலாவதியானதாகவோ கருதப்படும்" என்று, நேரடி வரி விதிப்பு கழகத்தின் தலைவர் சுசில் சந்திரா தெரிவித்தார்.