ஓட்டுப் போட... ஐடி ஊழியர்களிடையே அமோக ஆர்வம்..!
சென்னை: சட்டசபைத் தேர்தலில் வாக்களிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர்களிடையே பெரி அளவிலான ஆர்வத்தைக் காண முடிந்தது.
சென்னையிலும், பிற நகரங்களிலும் வசிக்கும் ஐடி ஊழியர்கள் பலரும் ஆர்வத்துடன் காலையிலேயே வாக்களிக்க வாக்குச் சாவடிகளுக்குப் படையெடுத்ததைக் காண முடிந்தது.
சென்னையில்தான் அதிக அளவிலான ஐடி நிறுவனங்கள் உள்ளன. இங்கு இன்று விடுமுறை அறிவிக்கப்படவில்லை என்ற போதிலும் வாக்களிக்க விரும்பிய நேரத்தில் செல்ல பெர்மிஷன் தரப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி அவர்கள் வாக்களித்து வருகின்றனர்.
அதேசமயம், பெங்களூர் உள்ளிட்ட ஊர்களில் வசித்து வரும் ஐடி ஊழியர்கள் பலர் விடுமுறை எடுத்துக் கொண்டு தமிழகம் வந்துள்ளனர். அவர்கள் தத்தமது பகுதிகளில் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
பொதுவாகவே இன்றைய வாக்குப் பதிவில் படித்தவர்களும், ஐடி ஊழியர்களும் அதிக அளவில் வாக்களிக்க குவிந்து வருவது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் வரலாறு காணாத அளவில் பல பிரச்சாரங்களை மேற்கொண்டது. அது படித்தவர்கள், ஐடி உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை பார்ப்போர் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்குமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதாக உள்ளது இந்த ஆர்வம்.