அவமானம், அவமானம், மாநாட்டில் பெண்களை குத்தாட்டம் போட வைத்தது தமிழகத்திற்கு அவமானம்: ஈ.வி.கே.எஸ்.
நாகை: சென்னையில் நடந்த சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் பெண்களை குத்தாட்டம் போட வைத்தது தமிழகத்திற்கு அவமானம் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வேதாரண்யத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
சென்னையில் இரண்டு நாட்களாக நடந்தது சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு இல்லை. அது அதிமுக மாநாடு ஆகும். விமான நிலையத்தில் இருந்து மாநாடு நடந்த இடம் வரை வழி எங்கும் சாலையின் இருபுறங்களிலும் அதிமுக கொடிகளும், பேனர்களும் தான் வைக்கப்பட்டிருந்தன.
மாநாட்டில் பெண்களை விட்டு குத்தாட்டம் போட வைத்தது தமிழகத்திற்கே அவமானம் ஆகும். தொழில் துவங்குபவர்களுக்கு தடையில்லா மின்சாரம் அளிக்க வேண்டும். 24 மணிநேரமும் மின்சாரம் அளிப்போம் என்றால் மட்டும் போதாதது. அதை எப்படி அளிப்பீர்கள் என்றும் தெரிவிக்க வேண்டும்.
நான் ஏன் அப்படி கூறுகிறேன் என்றால் தமிழகத்தில் இன்னும் பல இடங்களில் மின்வெட்டு இருக்கத் தான் செய்கிறது. நிலங்களை அளிக்கையில் விவசாயிகள் பாதிக்காத வகையில் அளிக்க முடியும் என்பதையும் அரசு கூற வேண்டும்.
தொழில் துவங்க வருபவர்களிடம் லஞ்சம் வாங்க மாட்டோம் என அதிமுக அரசு வாக்குறுதி அளிக்க வேண்டும் என்றார்.