இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையத்திற்குத்தான் இமாலய தோல்வி.. விளாசும் ஸ்டாலின்!
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையத்துக்குதான் இமாலய தோல்வி கிடைத்திருப்பதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையத்துக்குதான் இமாலய தோல்வி கிடைத்திருப்பதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் அமோக வெற்றி பெற்றுள்ளார். ஆளும் அதிமுக இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
தமிழகத்தின் வலிமை வாய்ந்த எதிர்க்கட்சியாக உள்ள திமுக ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டெபாசிட் இழந்து படுதோல்வியடைந்துள்ளது. இந்நிலையில் ஆர்கே நகர் இடைத்தேர்தல் குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது,
ஆர்கே நகரில் பெற்ற தோல்வி திமுகவுக்கானது அல்ல; தேர்தல் ஆணையத்தின் இமாலய தோல்வி என ஸ்டாலின் தெரிவித்தள்ளார். ஆர்.கே.நகரில் தேர்தல் ஆணையம் தோற்றுவிட்டது என மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
பாதாளம் வரை பாய்ந்த பணத்தையும் தாண்டி விலை மதிக்க முடியாத 24,651 வாக்குகளை திமுக பெற்றது என அவர் தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்றமே கண்டிப்பான உத்தரவிட்டும், ஹவாலா பாணியில் பணம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என ஸ்டாலின் கூறியுள்ளார்.
பணம் வாரிவாரி இறைக்கப்பட்டதை கைகட்டி வாய்பொத்தி வேடிக்கை பார்த்தது தேர்தல் ஆணையம் என மு.க.ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.