மாலைக்கு மேல் மாறிய வானிலை.. சென்னை, புறநகர்களில் மீண்டும் கன மழை!
சென்னை மற்றும் புறநகர்களில் மாலைக்கு மேல் இடியுடன் கூடிய கன மழை பெய்தது.
சென்னை: சென்னை மற்றும் புறநகர்களில் மாலைக்கு மேல் இடியுடன் கூடிய கன மழை பெய்தது.
வடகிழக்கு பருவமழையால் தீவிரமடைந்ததால் தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. கடந்த வாரத்தில் சென்னையில் வெளுத்த மழை தற்போது ஓய்வெடுத்தது. இதனால் மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.
இந்நிலையில் தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், 2000 சதுர கி.மீ.தூரத்தில் மேகக் கூட்டங்கள் சூழ்ந்திருந்ததால் நடுக்கடலில் மழை பெய்தது. அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது அதே இடத்தில் நிலவுகிறது.
வட தமிழகத்தில்...
சென்னையில் சில இடங்களில் மழை பெய்யும் என்றும் வடதமிழகத்திலும் மழைக்கு வாய்ப்பு என்றும் தெரிவித்தார். சென்னையில் காலை முதலே வானம் மேகமூட்டமாக இருந்தது. இந்தச் சூழ்நிலையில் மாலை வியாசர்பாடி, பெரம்பூர், சௌகார்பேட்டை, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, தண்டையார்பேட்டை, எழும்பூர், நுங்கம்பாக்கம், அயனாவரம், திருவான்மியூர் ஆகிய பகுதிகளில் கன மழை பெய்தது.
தண்ணீர் தேங்கியுள்ளது
இரவில், ராயபுரம், ராமாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், கோடம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், மகாலிங்கபுரம், முகப்பேர் ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்தது வருகிறது. இடியுடன் கூடிய கன மழையாக பெய்தது.
தண்ணீர் தேக்கம்
தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கும் அளவுக்கு கன மழை பெய்தது. இதனால் ஏற்கெனவே இடுப்பளவு தண்ணீரில் தத்தளித்த சென்னையின் பல்வேறு பகுதியினர் சற்று வேதனை அடைந்துள்ளனர்.
கடல் சீற்றம்
திருவள்ளூர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. எண்ணூர் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. மாலை முதலே கடல் சீற்றமாக உள்ளது.