திருச்சியில் வரலாறு காணாத வெயில்.. 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தால் மக்கள் தவிப்பு!
சென்னை: தமிழகத்திலேயே அதிக அளவாக இன்று திருச்சியில் 106 டிகிரி பாரன்ஹீட் வெயில் வெளுத்தது. இதன் காரணமாக திருச்சியில் இன்று பகல் நேரத்தில் மக்கள் பெரும் தவிப்புக்குள்ளானார்கள்.
தமிழகத்தில் 10 நகரங்களில் 100 டிகிரிக்கும் மேல் வெயில் கொளுத்தியதால் மக்கள் அவதிக்குள்ளானார்கள்.
தமிழகம் முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வருகிறது.கிட்டத்தட்ட அனைத்துப் பகுதிகளிலும் நல்ல வெயில் அடிக்கிறது. சென்னை, மதுரை, வேலூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட பல நகரங்களில் வெயில் கடுமையாக இருக்கிறது.
காலையில் தொடங்கும் கடும் வெயில் மாலை வரை வெளுத்து வாங்குகிறது. இதனால் வெளியில் தலை காட்டவே அஞ்சும் நிலை உள்ளது.
வேலூரில்தான் தற்போது அதிகமாக வெயில் அடித்து வருகிறது. இந்த நிலையில் இன்று வேலூரையும் தாண்டி திருச்சியில் அதிக அளவில் வெப்ப நிலை பதிவானது. அங்கு 106 டிகிரி பாரன்ஹீட் வெயில் இன்று வெளுத்தது. இதனால் மக்கள் பெரும் தவி்புக்குள்ளானார்கள். வெளியில் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது. கடும் அனல் காற்றும் வீசியது.
இதேபோல வேலூர், சேலம், மதுரை, சென்னையிலும் இன்று வெயில் வெளுத்தது.
சென்னையி்ல் இன்று 100 டிகிரிக்குள்தான் வெயில் இருந்தாலும் கூட 100 டிகிரிக்கு மேல் வெயில் இருப்பது போலவே ஒரு பீலிங்.
இன்று தமிழகத்தில் 10 நகரங்களுக்கு மேல் 100 டிகிரியைத் தாண்டியது வெயில். பல நகரங்களில் அனல் காற்றும் வீசியதால் மக்கள் தவிப்புக்குள்ளனார்கள்.
முக்கிய நகரங்களில் இன்றைய வெயில் நிலவரம்:
திருச்சி - 106
சேலம் -103
திருச்செங்கோடு - 103
திருப்பூர் - 102
மதுரை - 100
சென்னை - 97
நெல்லை - 97
கோவை - 97
வேலூர் - 97
கொடைக்கானல் - 82
ஊட்டி - 75