அனைவரும் நலமுடனும், வளமுடனும் வாழ சூளுரைப்போம்: முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன் பக்ரீத் வாழ்த்து
சென்னை: பக்ரீத் பண்டிகையான இந்த தியாகத் திருநாளில் அனைவரும் நலமுடனும், வளமுடனும், ஒற்றுமை உணர்வுடனும் வாழ்வதற்கு பாடுபட சூளுரைப்போம் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,
பக்ரீத் பண்டிகை, ஹஜ் பெருநாள், ஈதுல் அள்ஹா என்றெல்லாம் அழைக்கப்படும் தியாகத் திருநாளை உலக முஸ்லீம்கள் அனைவரும் கொண்டாடுகின்றனர். உருவமற்ற ஒரே இறைவனை வணங்குவதற்கென்று உருவாக்கப்பட்ட உலகின் முதல் பள்ளிவாசலான கஃபாவை வலம் வருவதிலும், அரஃபா பெருவெளியில் லட்சோப லட்சம் ஹாஜிகள் இறை தியானத்தில் ஈடுபடுவதும் புனித ஹஜ் கடமையின் அங்கங்களாகும்.
இந்நாளில் உயிரோட்டமாக உள்ள அம்சம் தியாகம் ஆகும். இறைவனை நம்புவதும் - அவனை வணங்குவதும் - அவனுக்காக எந்த தியாகத்தையும் செய்வதும் முழுமை அடைந்திருக்கும் இறை நம்பிக்கையின் அடையாளமாகும். மனிதனை கெடுக்கும் பேராசை, பொறாமை, அகங்காரம், ஆணவம், பகைமை போன்ற பாவக் கறைகளை விட்டு மனித இதயத்தை பரிசுத்தப்படுத்துவதற்கு பெயர் தான் குர்பானீ.
வன்முறை பெருகி, வரம்புகளற்ற வாழ்க்கையால் விளையும் சமூக கேடுகளை புறந்தள்ளி, மானிடநேய மாண்புக்குரிய மரபுகளையும், நல்லிணக்க கடமைகளையும் நிலை நிறுத்துவதற்கு தியாகம் செய்ய வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.
இந்த தியாகத் திருநாளில் அனைவரும் நலமுடனும், வளமுடனும், ஒற்றுமை உணர்வுடனும் வாழ்வதற்கு பாடுபட சூளுரைப்போம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.