ஆமை வேகத்தில் ம.ம.க... முயல் வேகத்தில் ஐ.யூ.எம்.எல்.. ஒரு சீட் ரெடி.. செம சுறுசுறுப்பு!
- கோயா
சென்னை: திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி படு சுறுசுறுப்பாக செயல்படும் அதே வேளையில் மனிதநேய மக்கள் கட்சி சற்று மந்த கதியில் உள்ளதாம்.
திமுக கூட்டணியில் பன்னெடுங்காலமாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி அங்கம் வகித்து வருவதோடு, ஒவ்வொரு தேர்தலிலும் உரிய தொகுதிகளை பெற்று போட்டியிட்டு வருகிறது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் 5 தொகுதிகளை கருணாநிதியிடம் போராடி பெற்று, கடையநல்லூரில் மட்டும் வெற்றி பெற்றுஅந்தக் கட்சியின் அபூபக்கர் எம்.எல்.ஏ ஆனார். மீதி நான்கு தொகுதிகளை அதிமுகவிடம் பறிகொடுத்தது ஐ.யூ.எம்.எல்.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக்
மறுபக்கம், மனித நேய மக்கள் கட்சியை பற்றி சொல்லவே தேவையில்லை. போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. இந்நிலையில் மக்களவை தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு விவகாரத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி அசுர வேகத்தில் செயல்பட்டு வருகிறது.
டிக் அடிக்கப் போகும் ஸ்டாலின்
மயிலாடுதுறை, வேலூர், ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளை முஸ்லீம் லீக் கொடுத்துள்ளதாம். அதில் ஏதேனும் ஒன்றை மு.க.ஸ்டாலின் டிக் அடிக்க உள்ளாராம். மேலும் தங்கள் பலத்தை நிரூபிக்க மதுரை ஒத்தக்கடையில் வரும் 16- ம் தேதி மாநாடு ஒன்றையும் நடத்த உள்ளார் பேராசிரியர் காதர் மைதீன்.
மந்த கதியில் மமக
மறுபக்கம் மனிதநேய மக்கள் கட்சி அமைதியாக இருக்கிறது. அக்கட்சி தரப்பிலிருந்து எந்த ஒரு முன்னெடுப்பும் இதுவரை இல்லையாம். பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் மூட்டு மாற்று அறுவைச்சிகிச்சை செய்ததில் இருந்து அவரால் முன்பு போல் நடக்க முடியவில்லையாம். உடல்நல ரீதியாக அவர் ரொம்பவே பாதிக்கப்பட்டுள்ளாராம்.
போட்டியிடுவார்களா இல்லையா
இதனால் ஹைதர் அலி, அப்துல் சமது உள்ளிட்ட இரண்டாம் கட்ட தலைவர்கள் தான் கூட்டணி குறித்து பேச வேண்டிய நிலை. இதனிடையே ம.ம.க தரப்பில் யாரும் சந்தித்து பேசாததால் அவர்களுக்கு மக்களவை தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை போல் என நினைத்ததாம்.
திமுக பதில்
இதையடுத்து பதறிப்போய் திமுக கூட்டணியில் ஒரு தொகுதியை பெறுவதற்கான முயற்சியில் ம.ம.க.தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனால், இப்போது வேண்டாம் சட்டமன்றத் தேர்தலில் உரிய தொகுதிகள் அளிக்கிறோம் என ம.ம.க.வுக்கு திமுக கூலாக பதில் அளிக்கிறதாம்.