திமுக கூட்டணியில் 2வது கட்சியாக இணைந்தது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
சென்னை: சட்டசபை தேர்தலுக்கான திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவ காதர் மொகிதீன் இதனை அறிவித்தார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான கூட்டணிகள் இறுதி வடிவம் பெற்று வருகின்றன. திமுக தலைமையிலான கூட்டணியில் சனிக்கிழமையன்று காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக இடம் பெற்றது.
இதனைத் தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலத் தலைவர் காதர் மொகிதீன் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் இன்று திமுக தலைவர் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து பேசினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காதர் மொகிதீன், திமுக கூட்டணியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து நீடிப்பதாக கருணாநிதி கூறியதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
12 தொகுதிகளில்..
மேலும் 12 தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்களை திமுக நிறுத்த வேண்டும் என்றும் கருணாநிதியிடம் கேட்டுக் கொண்டதாகவும் காதர் மொகிதீன் கூறினார்.
தற்போதைய நிலையில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸைத் தொடர்ந்து 2-வது கட்சியாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.
வரக் காத்திருக்கும் கட்சிகள்
இந்த கூட்டணியில் தேமுதிக இணைய வேண்டும் என ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ, மனித நேய மக்கள் கட்சி (அன்சாரி பிரிவு) ஆகியவையும் விரைவில் திமுக தலைமையிலான கூட்டணியில் இணையக் கூடும் என தெரிகிறது.