முஸ்லிம் லீக் சமூக ஒற்றுமை யாத்திரைக்கு ஆதரவு தந்தவர் ஜெயேந்திரர்: காதர் மொகிதீன் இரங்கல்
காஞ்சி ஜெயேந்திரர் மறைவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மறைவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கலில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்திய சமூக ஒற்றுமை யாத்திரைக்கு ஆதரவு தந்தவர் ஜெயேந்திரர் என புகழஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள அறிக்கை:
காஞ்சி சங்கர மடத்தலைவர், ஜெயேந்திரர் மரணமுற்ற செய்தி மிகுந்த வருத்தத்தையும், துக்கத்தையும் அளிக்கிறது. சங்கராச்சாரியார் ஆன்மீக தத்துவங்களை மக்கள் நடைமுறைப்படுத்த வழிகாட்டி வந்தவர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் 2000-ஆம் ஆண்டில் ராமேஸ்வரத்தில் உள்ள ஆதம்(அலை) அவர்களின் மக்கள் ஆபில், காபில் அடக்கத்தலத்திலிருந்து சமூக ஒற்றுமை யாத்திரை துவங்கப்பட்டது. அந்த யாத்திரை தொடங்குவதற்கு முன்பு ராமேஸ்வரம் கோயிலுக்கு வருகைத் தந்திருந்த ஜெயேந்திரரை சங்கராச்சாரியார் பெரும் கூட்டமாகப் போய் சந்தித்து 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்று கூறி ஒற்றுமை யாத்திரை துவங்குவதைப் பற்றி எடுத்துச் சொன்னோம்.
சங்கராச்சாரியார் மிகவும் மகிழ்ந்து காலத்திற்கு தேவைப்பட்ட அவசியமான நற்காரியத்தை தொடங்கி யிருக்கிறீர்கள். உங்கள் யாத்திரை உன்னத வெற்றி பெற வாழ்த்துகிறோம் என்று கூறியதோடு, ராமேஸ்வரம் கோயில் தர்மகர்த்தாவையும் துவக்க விழாவில் வாழ்த்துரை கூற அனுப்பி வைத்தும் கௌரவித்தார்கள். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரலாற்றில் 8 நாட்கள் நடந்த இந்த யாத்திரை திருச்சி நத்தர்வலி தர்ஹாவில் நிறைவு பெற்றது.
ஒவ்வொரு ஊரிலும் உள்ள சங்கராச்சாரியாரின் சீடர்களும், தர்மகர்த்தாக்களும் முஸ்லிம் லீக் நடத்திய ஒற்றுமை யாத்திரைக்கு வாழ்த்துகளையும், ஆசிர் வதிப்பையும் அளித்து பெருமைப் படுத்தினார்கள்.
'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' எனும் தத்துவ நெறியில் ஆன்மீக வழிகாட்டியாக வாழ்ந்து மறைந்துள்ள சங்கராச்சாரியாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.
இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.