காயிதே மில்லத் கற்றுத் தந்த கண்ணிய அரசியலை கட்டிக் காப்போம்... கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் பேச்சு
சென்னை: காயிதே மில்லத் கற்றுத்தந்த கண்ணிய அரசியலைக் கட்டிக் காப்போம் என்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி எம்.எல்.ஏ கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் தமிழக சட்டசபையில் பேசும்போது குறிப்பிட்டார்.
தமிழக சட்டசபையின் சபாநாயகராக தனபால், துணை சபாநாயகராக பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
அவை முன்னவர் ஒ. பன்னீர் செல்வம் எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் தனபாலை சபாநாயகர் ஆசனத்தில் அமர வைத்தனர். அதனை தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட இருவரையும் வாழ்த்தி எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின், காங்கிரஸ் கட்சி தலைவர் கே. ஆர். ராமசாமி ஆகியோர் உரையாற்றினர்.
அதனை தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற கட்சி தலைவர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் வாழ்த்தி பேசினார். அவரது கன்னிப்பேச்சு வருமாறு:
மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே. புதிதாக அரசு ஏற்றிருக்கும் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கும், பேரவை தலைவர் அவர்களுக்கும் எங்களின் இதயம் நிறைந்த நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஜனநாயக மரபுகள் தழைக்க ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகளுக்கும் இணக்கம் ஏற்படும் நல்ல மரபை துவங்கி வழிகாட்டியிருக்கும் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றிருக்கும் எங்களது தளபதி அவர்களுக்கும், எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த மாபெரும் அவையிலே மாபெரும் தலைவர்களாக இருந்து தமிழகத்தினுடைய முன்னேற்றத்திற்காக வேண்டி பல்வேறு அளப்பணிகளை ஆற்றியிருக்கியிருக்கின்றார்கள். அந்த தலைவர்களுடைய நெறியிலே நாமும் பயணித்து ஒட்டுமொத்த தமிழகமும் தழைத்தோங்குவதற்கு ஒருங்கிணைந்து நாமெல்லாம் பணிகளையும் ஆற்ற வேண்டும் என்ற வேண்டுகோளோடு இந்த சிறப்பிற்குரிய அவையில் நான் சார்ந்திருக்கக்கூடிய இந்திய யூனியன் முஸ்லிம் லீகினுடைய மிகப்பெரிய தலைவராக இருந்த காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிப், அப்துல் சமது சாஹிப், அப்துல் லத்தீப் சாஹிப், போன்றவர்களெல்லாம் பணியாற்றிய இந்த அவையில் இந்த எளியவனும் பணியாற்றுவதற்கு வாய்ப்பை நல்கிய என்னுடைய கடையநல்லூர் தொகுதியினுடைய மக்களுக்கும், நான் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்காக வேண்டி எங்களுக்கு வழிகாட்டியாக இருக்கின்ற கூட்டணியின் தலைவர் தமிழனத் தலைவர் கலைஞர் அவர்களுக்கும், எங்களுடைய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களுக்கும், இந்த நல்ல நேரத்திலே நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இப்பேரவையில் பொறுப் பேற்றிருக்கக் கூடிய மாண்புமிகு தலைவர் அவர்களும், துணைத்தலைவர் அவர்களும் ஜனநாயக மரபுகள் தழைத்திடவும், ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மூலமாக ஒட்டுமொத்த தமிழகமும் முதன்மை மாநிலமாக திகழ்வதற்கும், தமிழகத்திலே ஒட்டுமொத்தமாக அனைத்து மக்களும், சிறுபான்மை சமுதாயத்தினர், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் சம உரிமைகளை பெற்று வாழ்வதற்கு இந்த அரசு அனைத்து வகையிலும் எங்களுக்கு உறுதுணை புரிய வேண்டும்.
எங்களுக்கு எல்லா வகையிலும் அனுசரனையாக இருக்க வேண்டுமென்ற வேண்டுகோளை வைத்து, இந்த அவையிலே காட்சியாக இருக்கக்கூடிய எங்களுடைய தலைவர் காயிதே மில்லத் அவர்களுடைய படத்திற்கு கீழே கண்ணியமான ஒரு வாக்கியம் இருக்கின்றது. கண்ணிய அரசியலை கட்டிக் காப்போம் என்ற அந்த வாசகத்தின் அடிப்படையில் எல்லா நிலைகளிலும் இந்த ஆட்சியும், ஆட்சியிலே பங்கேற்று இருக்கக்கூடிய அமைச்சர் பெருமக்களும், மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்று இருக்கக்கூடிய தளபதியார் அவர்களும் எடுக்கக் கூடிய அனைத்து முயற்சிகளுக்கும் ஒருங்கிணைந்த முறையிலே நாங்கள் செயலாற்றுவோம் என்ற எங்களுடைய கோரிக்கையை தெரிவித்து, எல்லா நிலைகளிலும் நல்லாட்சி வளர்வதற்கு நாங்கள் எல்லாம் துணை நிற்போம், எல்லா நிலைகளிலும் தமிழகம் உறுதுணையாக முதன்மை மாநிலமாக திகழ்வதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சார்பில் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் குறிப்பிட்டார்.