காவிரி : ஏப்ரல் 5 வேலைநிறுத்தத்திற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு
ஏப்ரல் 5ல் நடக்கும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முழு ஆதரவு தருவதாக அறிவித்துள்ளது.
சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து திமுக சார்பில் நடக்கவிருக்கும் தமிழகம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கலந்துகொள்ளும் என்று அக்கட்சியின் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து வரும் 5ம் தேதி தமிழகம் தழுவிய மாபெரும் வேலைநிறுத்தப்போராட்டத்திற்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழக மக்களை வஞ்சித்து வரும் மத்திய - மாநில அரசுகளை கண்டித்து தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் ஏப்ரல் 5, முழு வேலை நிறுத்தப்போராட்டம் நடத்துவதென சென்னை அண்ணா அறிவாலயத்தில் எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மத்தியில் ஆளும் பா.ஜ.க. மோடி அரசாங்கம் விவசாயிகளின் தொடர் போராட்டங்களுக்கு மதிப்பளிக்காமலும், அனைத்து கட்சி தலைவர்களை சந்திக்க மறுத்திருப்பதோடு, உச்சநீதிமன்ற தீர்ப்பையும் அவமதித்து தமிழர்களை வஞ்சித்திருக்கின்றது.
தமிழகத்தை புறக்கணித்து வரும் மத்திய அரசை கண்மூடித்தனமாக தமிழக அரசு பின்பற்றி தமிழக மக்களின் உரிமைகளை நிலைநாட்ட தவறிவிட்டது. மத்திய-மாநில அரசுகளின் முகமூடியை கிழித்தெறிந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை நடைபெறும் போராட்டங்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முழு ஆதரவு அளிக்கின்றது.
ஏப்ரல் 5ம் தேதி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் நடைபெறும் முழு வேலை நிறுத்த போராட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில, மாவட்ட, நகர, பிரைமரி நிர்வாகிகளும், முஸ்லிம் மாணவர் பேரவை, இளைஞர் அணி, சுதந்திர தொழிலாளர் யூனியன், மகளிர் அணி ஆகிய பொறுப்பாளர்களும் முழு ஈடுபாட்டோடு பங்கேற்று தமிழர்களின் வாழ்வுரிமை போராட்ட வெற்றிக்கு துணை நின்றிட வேண்டுகிறோம்.
இப்போராட்டத்திற்கு விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், மகளிர் , தொழிற் சங்கத்தினர் அனைவர்களும் முழு ஆதரவு அளித்து அறவழியில் நம் போராட்ட வெற்றிக்கு துணை நின்றிடுமாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சார்பில் வேண்டுகோளை வைக்கின்றோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.