36 ஆண்டுகள் கழித்து கடையநல்லூரில் வெற்றி பெற்ற இந்திய யூனியன் முஸ்லீம் லீக்
கடையநல்லூர்: இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி 36 ஆண்டுகளுக்கு பிறகு கடையநல்லூர் சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி கடையநல்லூர் உள்பட 5 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஏணி சின்னத்தில் போட்டியிட்டது.
இந்நிலையில் நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
வெற்றி
கடையநல்லூர் தொகுதியில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் கே.ஏ.எம். முகமது அபூபக்கர் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தமிழ் மாநில முஸ்லீம் லீக் வேட்பாளரான எஸ். ஷேக்தாவூதை விட 1, 194 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
வாக்கு எண்ணிக்கை
வாக்கு எண்ணிக்கையின்போது அபூபக்கர் மற்றும் ஷேக்தாவூத் மாறி மாறி முன்னிலை வகித்து வந்த நிலையில் அபூபக்கருக்கு தபால் வாக்குகள் கைொடுத்தது. பதிவாகியிருந்த தபால் வாக்குகளில் அபூபக்கருக்கு 770 வாக்குகளும், ஷேக்தாவூதுக்கு 201 வாக்குகளும், பாஜக வேட்பாளருக்கு 69 வாக்குகளும், தேமுதிக வேட்பாளருக்கு 64 வாக்குகளும் கிடைத்தது.
36 ஆண்டுகள்
1980ம் ஆண்டு தேர்தலில் கடையநல்லூர் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் ஆ. சாகுல்ஹமீது வெற்றி பெற்றார். அதன் பிறகு 36 ஆண்டுகள் கழித்து தற்போது தான் கடையநல்லூரில் இந்திய யூனியன் முஸ்லீ்ம் லீக் வெற்றி பெற்றுள்ளது.
கடையநல்லூர்
சட்டசபை தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி போட்டியிட்ட 5 தொகுதிகளில் கடையநல்லூரில் மட்டுமே வெற்றி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.