ராஜாவும், நானும் ஒன்னாப் படிச்சவங்க.. தீபா புது தகவல்
போயஸ் கார்டன் வீட்டில் ஜெ.தீபாவின் கணவர் மாதவனுடன் சண்டையில் ஈடுபட்ட ராஜா தன்னுடைய கார் ஓட்டுனர் அல்ல. பள்ளித் தோழர் என்று ஜெ.தீபா விளக்கமளித்துள்ளார்.
சென்னை : ராஜா என்னுடைய கார் ஓட்டுனர் அல்ல. அவர் என்னுடன் பயின்ற பள்ளி பருவத் தோழர் என்று ஜெ.தீபா கூறியுள்ளார்.
மறைந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கடந்த வாரம் போயஸ் கார்டனுக்கு திடீரென சென்றதோடு, அங்கு அரங்கேறிய குடும்பச் சண்டை பரபரப்புகளுக்கு பஞ்சமில்லாமல் இருந்தது. இந்நிலையில் அன்று நடந்த விஷயங்கள் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு தீபா பேட்டிளித்துள்ளார்
அதன் விவரங்கள்:
போயஸ் கார்டன் மீது எனக்கு உரிமை இருந்தாலும் சட்டரீதியாக அதை அணுகலாம் என்று அமைதியாகவே இருந்தேன். ஜூன் 11ம் தேதி அதிகாலை 4 மணிக்கு என்னுடைய தம்பி தீபக் போன் செய்து போயஸ் கார்டன் வந்து அத்தை படத்திற்கு பூஜை செய்ய வேண்டும் என்று கூறினான். அதனாலேயே நான் அங்கு சென்றேன். கேட் திறந்தே இருந்தது. உள்ளே சென்ற சில நிமிடங்களில் அங்கு இருந்த சசிகலாவின் படத்தை அகற்றச் சொன்னேன். அதனால் அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள் என்னை அடிக்க வந்தார்கள்.
ஆபத்தில் சிக்கிக்கொண்டேன்
எனக்கும் தீபக்கிற்கும் 12 வருடங்களாக பேச்சுவார்த்தையே கிடையாது. அதற்கு அவன் சசிகலா குடும்பத்துடன் வைத்திருக்கும் தொடர்பே காரணம்.
எனினும் மிகவும் உருக்கமாக தீபக் பேசியதாலேயே போயஸ் கார்டன் சென்றேன். ஆனால் அங்கு சென்ற பின்னர் தான் ஏதோ விபரீதத்தில் சிக்கிக் கொண்டேன் என்பது புரிந்தது. இதனாலேயே என்னுடைய கணவரை அங்கு அழைத்தேன்.
பயத்தால் மாதவனை அழைத்தேன்
என்னை தாக்கிவிடுவார்கள் என்ற பயம் ஒருபுறம், மற்றொருபுறம் தேவையில்லாத வழக்கில் சிக்க வைத்துவிடுவார்களோ என்ற அச்சமும் இருந்தது. அதனாலேயே மாதவனை அழைத்தேன். தீபக் என்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டானே என்ற கோபத்தின் காரணமாகத் தான் போயஸ் கார்டன் வாசலில் சண்டையிட்டேன்.
டிரைவர் இல்லை
ராஜாவிற்கும் மாதவனுக்கும் ஏன் சண்டை வந்தது என எனக்கே தெரியவில்லை. எல்லோரும் சொல்வது போல ராஜா என்னை இயக்கவில்லை. ராஜா என்னுடைய டிரைவரும் இல்லை. அவர் என்னுடைய பள்ளி பருவத் தோழர். ஆனால் ராஜாவை என்னுடைய டிரைவர் என்றும், அவர் கட்டுப்பாட்டில் தான் நான் இருக்கிறேன் என்றும் சொல்வதெல்லாம் தேவையில்லாத வதந்தியை கிளப்புகின்றனர்.
தார்மீக உரிமை உள்ளது
என் பாட்டி சந்தியா எழுதிய உயில் என்னிடம் தான் உள்ளது. அதில் தெளிவாக என் அப்பா மற்றும் அத்தைக்கு சொத்துகளை எழுதி வைத்துள்ளார். அத்தை பெயரில் உள்ள சொத்து அவருக்குப் பிறகு பேரப்பிள்ளைகளுக்குத் தான் என்றும் உள்ளது. அதனால் தார்மீக ரீதியில் அதில் எனக்கு சொந்தம் உள்ளது.
கோட்டையாகவே இருக்கும்
போயஸ் கார்டன் வீட்டை அரசியல் சூழ்ச்சி காரணமாக மியூசியமாக்க நினைக்கிறார்கள். அது எப்போதுமே அதிமுக கோட்டையாக இருக்கவே நான் விரும்புகிறேன். அதிமுகவிற்கு அடுத்த தலைமுறை தலைவர் தேவை. அது நிச்சயம் நானாக இருப்பேன். இவ்வாறு தீபா பேட்டியில் தெரிவித்துள்ளார்.