தீயாய் எழுந்த தீபா.. கார் டிரைவர் ராஜாவை பேரவையில் இருந்து நீக்கி அதிரடி!
Recommended Video
சென்னை: எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையில் இருந்து கார் டிரைவர் ராஜா அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்காக உத்தரவை, அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் தீபா இன்று வெளியிட்டுள்ளார். இதனால் அந்த அமைப்பு தொண்டர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெடுநாளாக நீரு பூத்த நெருப்பாக இருந்த மோதல் இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அறிக்கையில் அதிரடி
இதுகுறித்து தீபா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (ஜெ.தீபா) அணி மற்றும் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் கொள்கைக்கும், கோட்பாடுகளுக்கும், விதிமுறைகளுக்கும் மாறாக தொடர்ந்து கழகத்திற்கு களங்கத்தை விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால் இன்று முதல் (17-09-2018) கழகத்தில் இருந்தும், பேரவையின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் A.V.ராஜா விடுவிக்கப்படுகிறார். எனவே அவருடன் கழக உறுப்பினர்கள் யாரும் கழக கட்டுப்பாட்டை மீறி எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ஜெ.தீபா அறிக்கையொன்றில் 19ம் தேதியான இன்று தெரிவித்துள்ளார்.
பின்னணி என்ன
எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் பொதுச் செயலாளராக தீபா செயல்பட்டு வருகிறார். அவரின் கார் டிரைவராக ராஜா செயல்பட்டு வந்தார். ராஜாவிற்கும், தீபா கணவர் மாதவனுக்கும் நடுவே வெகுகாலமாக உரசல் உள்ளது. இப்போது இந்த உரசல் அதிகரித்துள்ளதால் ராஜாவை பேரவையில் இருந்து நீக்க மாதவன் அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
தீபா திட்டம்
அதிமுக தனக்குதான் சொந்தம் என மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக முன்னாள் பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூறி வருகிறார். எனவே கட்சிக்கு உரிமை கொண்டாடிவரும் நிலையிலும், தனியாக ஒரு பேரவையையும் ஏற்படுத்தி அதற்கு தன்னை பொதுச்செயலாளராகவும் நியமித்து 'கலக்கி' வருகிறார்.
தொண்டர்களுக்கு குஷி
இந்த நிலையில்தான், கட்சியினர் வலியுறுத்துவதாக கூறி ராஜாவை அமைப்பு உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குமாறு, தீபாவை மாதவன் வலியுறுத்தி வந்ததாகவும், அதனால் வேறு வழியின்றி ராஜாவை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அதிரடியாக தீபா நீக்கம் செய்து உத்தரவிட்டதாகவும், புழகாங்கிதம் தெரிவிக்கிறார்கள் அவரது 'கட்சியினர்'.