மாதவன் வீட்டுக்கு வந்து 4 நாள் ஆச்சு... எங்க இருக்காருனு கேக்கவே மாட்டேன்... குண்டை போடும் ஜெ. தீபா
மாதவன் வீட்டுக்கு வந்து 4 நாட்கள் ஆகிறது என்று ஜெ.தீபா தெரிவித்தார்.
சென்னை: மாதவன் வீட்டுக்கு வந்து 4 நாட்கள் ஆகின்றன. அவர் எங்கே இருக்கிறார் என்பது எனக்கு தெரியாது, அதை நான் கேட்கவே மாட்டேன் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் போயஸ் தோட்டத்துக்கு வெளியே ராஜா கண் முன்னே மாதவனை பொது இடம் என்றும் பாராமல் தீபா திட்டியுள்ளார். மாதவனுக்கும் தீபாவுக்கும் இடையே ஏற்படும் பிரச்சினைகளுக்கு டிரைவர் ராஜாதான் காரணம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து ஜெ.தீபா சன் நியூஸ் தொலைகாட்சி சேனலில் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கூறுகையில் எனது கணவர் வீட்டை விட்டு சென்று 4 நாட்கள் ஆகிறது. இதெல்லாம் சகஜம். எனது நண்பர்கள் அமெரிக்கா, லண்டன் ஆகிய நாடுகளில் செட்டில் ஆகிவிட்டனர். அதனால் அவர்கள் உள்ளூரில் இருந்தாலும் கணவரை வாரத்துக்கு ஒரு முறையோ 6 மாதத்துக்கு ஒரு முறையோதான் பார்ப்பார்கள். அதுபோல்தான் நான் இருக்க விரும்புகிறேன். அது வெளிநாடு, இது தமிழ்நாடு என்று பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்காததால்தான் தமிழகம் இன்னும் பின்தங்கியுள்ளது.
ராஜாவிடம் கட்டளை
நான் ஒரு கம்பெனியில் வேலை பார்ப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். அந்த கம்பெனியில் இவர்கள்தான் வேலை பார்க்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்தால் அந்த கம்பெனிக்கு நான் வேலைக்கே போக முடியாது. நண்பர் ராஜாவிடம் கட்டளையிட்டு வேலை வாங்குவது போல் மாதவனிடம் வேலை வாங்க முடியாது. மாதவன் காணாமல் போய் 4 நாட்கள் ஆவது ஒன்றும் எனக்கு புதிதல்ல. இது வழக்கமாக நடக்கும் ஒன்றுதான்.
கட்டுப்படுத்த முடியாது
எங்களுக்குள் சண்டை ஏற்பட்டு நான் எங்கே போனாலும் அவர் கேட்க மாட்டார். அதுபோல் அவர் எங்கு போனாலும் நான் கேட்க மாட்டேன். என் அத்தை ஜெயலலிதாவும் சசிகலாவின் கட்டுப்பாட்டில் இருந்ததாக சொல்லப்படுவது இயற்கைக்கு புறம்பான விஷயம். யாரை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. நானும் ராஜாவின் கட்டுப்பாட்டில் இல்லை.
விலகி சென்றது கொஞ்சம் பேர்தான்
எனக்கு தேவை சுதந்திரம். நான் என்ன செய்வது என்ற முடிவை நான் மட்டும்தான் எடுக்க வேண்டும். ஜெயலலிதா மறைந்த பின்னர் என் வீட்டில் வாசலில் சேர்ந்த கூட்டம் தற்போது காணாமல் போனதற்கு காரணம் எனக்கும் மாதவனுக்குமான பிரச்சினையால் அல்ல. அவர்கள் முதலில் என்னிடம் வந்தது, சசிகலாவின் தலைமையை ஏற்க விரும்பாமலும், அதிமுகவுக்கு ஒரு வாரிசு தேவை என்பதாலும், அடுத்த கட்ட தலைவர் யார் என்பதாலும் தான் வந்தார்கள். அந்த கோரிக்கைகள் ஒரு கட்டத்தில் நிறைவேறாமல் போனதால் அதிருப்தி அடைந்த அவர்கள் என்னை விட்டு கொஞ்சம் பேர் விலகி சென்று வேறு அணியில் இணைந்து கொண்டனர்.
அத்தை பார்த்து காப்பி இல்லை
நான் இதுவரை யார் வீட்டு வாசலிலும் நின்றது கிடையாது. அதனால் அதிமுகவில் நான் இணைவேனா இணைய மாட்டேனா என்றெல்லாம் என்னால் சொல்ல இயலாது. நான் அதிமுகவை அபகரிக்க ஆசைப்படவில்லை. நான் எப்போதும் ஜெயலலிதா இல்லை. எனது குரல், முக அமைப்பு ஆகியவை மரபு ரீதியாக ஒன்றாக இருக்கலாம். அதற்காக நான் அவரை பார்த்து எப்போதும் காப்பி அடித்ததில்லை என்றார் ஜெ.தீபா.