போலி வருமான வரித்துறை அதிகாரி வழக்கில் முன் ஜாமீன் பெற மாதவன் முயற்சி?
போலி வருமான வரித்துறை அதிகாரி தொடர்பான வழக்கில் மாதவன் முன் ஜாமீன் பெற இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
Recommended Video
சென்னை: போலி வருமானவரித்துறை அதிகாரி தொடர்பான வழக்கில் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையின் நிறுவனரும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளுமாகிய ஜெ.தீபாவின் கணவர் மாதவன் முன் ஜாமீன் பெற முயற்சித்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
போலி வருமான வரித்துறை அதிகாரி தொடர்பான வழக்கில் தலைமறைவாகியுள்ள தீபாவின் கணவர் மாதவன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடந்த வாரம் தீபாவின் சொத்து ஆவணங்களை பறிப்பதற்காக அவரது கணவர் மாதவனின் ஏற்பாட்டில் தான் தீபா வீட்டிற்கு சென்று போலி வருமான வரித்துறை அதிகாரியாக நடித்ததாக கைது செய்யப்பட்ட பிரபாகரன் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பிரபாகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் பிரபாகரனுக்கு போலி ஐ.டி கார்டு தயாரித்து கொடுத்த அச்சக உரிமையாளரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தீபாவின் கணவர் மாதவனிடம் விசாரணை நடத்த முடிவெடுத்துள்ளனர்.
போலீசாரின் விசாரணைக்குப் பயந்து கடந்த இரு தினங்களாக மாதவன் தலைமறைவாகியுள்ளார். இந்நிலையில் மாதவனை கைது செய்ய போலீசார் முடிவெடுத்துள்ளதுடன் அவர் மீது வழக்கும் பதிவு செய்து தேடி வருகின்றனர்.
ஓரிரு தினங்களில் மாதவனை கைது செய்து விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் கூறியுள்ளனர். போலீசாரின் கைது நடவடிக்கைக்குப் பயந்து தலைமறைவாகியுள்ள மாதவன், தனது வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி விண்ணப்பிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.