வேட்பு மனு தாக்கலுக்கும் லேட்டு தானா... கடைசி டோக்கன் ஜெ. தீபாவுக்குத் தானாம்!
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட கடைசி நாளான இன்றும் கடைசி நேரத்தில் வந்ததால் ஜெ. தீபாவிற்குத் தான் கடைசி டோக்கன் அளிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நேரத்தில் வந்ததால் ஜெ. தீபாவிற்கு கடைசி டோக்கனான 91வது டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.
மறைந்த ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்கே நகரில் கடந்த ஏப்ரல் மாதத்தில் பணப்பட்டுவாடா புகார் காரணமாக நிறுத்தப்பட்ட இடைத்தேர்தல் டிசம்பர் 21ம் தேதி நடத்தப்படுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.
திமுக, அதிமுக, நாம்தமிழர் கட்சி, தினகரன் உள்ளிட்டோர் வெள்ளிக்கிழமையே தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துவிட்டனர். திடீரென சனிக்கிழமை சுயேச்சையாக போட்டியிடப்போவதாக அறிவித்த நடிகர் விஷால், பாஜக, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா உள்ளிட்டோர் இன்று மனு தாக்கல் செய்கின்றனர்.
முழக்கமிட்டதால் சலசலப்பு
ஏற்கனவே நேரம் வாங்கி இருந்ததால் பாஜக வேட்பாளர் கரு. நாகராஜன் 1 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டுச் சென்றார். எனினும பாஜக, பகுஜன் சமாஜ் கட்சியினர் தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகம் முன்பு எதிர் எதிர் முழக்கங்களையிட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சுயேச்சைகள் எதிர்ப்பு
இந்நிலையில் நடிகர் விஷால் வந்தால் வரிசையில் காத்திருந்து தான் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று சுயேச்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்ய வந்திருந்தவர்கள் தெரிவித்தனர். சுயேச்சை வேட்பாளர்கள் தேர்தல் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுட்டதோடு மறியலும் செய்தனர்.
விஷாலுக்கு 68வது டோக்கன்
இதனிடையே தன்னுடைய ஆதரவாளர்களுடன் வந்த விஷாலுக்கு மனு தாக்கலுக்கான டோக்கன் அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு 68வது டோக்கன் எண் தரப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் வேட்பு மனு தாக்கலுக்கு வந்திருந்தார். ஆனால் அவர் கடைசி நேரத்தில் தான் வந்ததாக தெரிகிறது.
போலீஸ் தடுத்ததாக புகார்
வேட்பு மனு தாக்கலுக்கு 1 மணியளவிலேயே வந்துவிட்டதாகவும், போலீசார் வாகனத்தை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்திவிட்டதாகவும் தீபா தெரிவித்துள்ளார். போலீசார் அனுமதிக்காததால் நடந்து மனு தாக்கலுக்கு நடந்தே வந்தேன் என்றும் கூறியுள்ளார்.
கடைசி டோக்கன்
தேர்தல் நடத்தை விதிகள் முறையாக கடைபிடிக்கப்படவில்லை,வேட்பு மனு தாக்கலுக்கு வேட்பாளரைக் கூட அனுமதிக்காமல் போலீசார் வானகத்தை தடுத்து நிறுத்துகின்றனர். எனக்கு 91வது டோக்கன் கொடுத்திருக்கின்றனர் மனு தாக்கலுக்காக காத்திருக்கிறேன் என்றும் தீபா கூறியுள்ளார்.
லேட்டா வந்தா எப்படி?
வேட்பு மனு தாக்கலுக்கு வந்திருந்த தீபா ப்ரீஹேர்ஸ்டைலில் கருப்பு நிற சேலை அணிந்து வந்திருந்தார். சமீப காலமாக தீபா தன்னுடைய ஆடை மற்றும் அலங்காரத்தை அக்கறை கொண்டு புதிய மாற்றங்களை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இதெல்லாம் சரி ஆனால் வேட்புமனு தாக்கலுக்கும் லேட்டா வந்து கடைசி டோக்கன் வாங்கியதால் தீபா மனு தாக்கல் செய்ய இரவு 8 மணியாகிவிடும் என்று கூறப்படுகிறது.