அதிமுக தலைமை அலுவலகம் வந்த ஜெ. தீபா கணவர் மாதவனால் பரபரப்பு!
முதல்வர் பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக ஜெ. தீபாவின் கணவர் மாதவன் அதிமுக தலைமை அலுவலகம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
சென்னை: ஓராண்டு நிறையு செய்துள்ள முதல்வர் பழனிசாமிக்கு வாழ்த்து சொல்வதற்காக அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஜெ. தீபாவின் கணவர் மாதவன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி தினசரி நாளிதழ்களில் மிகப்பெரிய அளவில் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன. ஓராண்டின் சாதனைகள் என்று துறை வாரியாக செய்யப்பட்டுள்ள விஷயங்கள் பக்கம் பக்கமாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளன.
முதல்வர் பழனிசாமி ஓராண்டு ஆட்சியை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கு கட்சியினர் பலரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்தும் வருகின்றனர். இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபாவின் கணவர் மாதவன் இன்று திடீரென ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகம் வந்தார்.
முதல்வர் பழனிசாமியையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார் ஜெ. தீபா. கணவர் ஒரு கட்சி மனைவி ஒரு கட்சி என்று தீபாவும், மாதவனும் தனித் தனி கட்சியை நடத்தி வருகின்றனர்.
தீபா, மாதவன் இடையே அடிக்கடி பிரச்னைகள் ஏற்பட்டும் வருகின்றன. இந்நிலையில் திடீர் திருப்பமாக மாதவன் அதிமுக தலைமை அலுவலகம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு ஆண்டு நிறைவு செய்துள்ள முதல்வருக்கு வாழ்த்து தெரிவிக்க மாதவன் வந்ததாக தெரிகிறது.
மாதவனை தடுத்து நிறுத்திய போலீசார் முதல்வரை சந்திக்க முன் அனுமதி வாங்கப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பினர். முன் அனுமதி வாங்கினால் மட்டுமே உள்ளே செல்ல முடியும் என்றும் மாதவனை தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து மாதவன் சிறிது நேரம் அதிமுக அலுவலகத்திற்கு வெளியிலேயே காத்திருந்தார்.
மாதவன் வந்திருக்கும் தகவல் கட்சி அலுவலகத்திற்குள் இருந்த முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாதவனை உள்ளே பாதுகாப்பாக அழைத்து வருமாறு அவர்கள் உத்தரவிட்டதையடுத்து மாதவன் உள்ளே அனுமதிக்கப்பட்டார். அவர் முதல்வர் பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்துவிட்டு சென்றார்.