ஜெ. தீபாவுக்குத் தான் பகை... முதல்வர், துணை முதல்வரை சந்தித்து ஆதரவு தெரிவித்த மாதவன்!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து உண்ணாவிரதம் இருந்து வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மாதவன் ஆதரவு தெரிவித்தார்.
சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து உண்ணாவிரதம் இருந்து வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஜெ. தீபாவின் கணவர் மாதவன் ஆதரவு தெரிவித்தார்.
உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று காலை 9 மணி முதல் உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது. மாவட்ட தலைநகரங்களில் அமைச்சர்கள், நிர்வாகிகள் தலைமையில் இந்த உண்ணாவிரதமானது நடைபெற்று வருகிறது.
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் உண்ணாவிரதத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இவர்களுக்கு அதிமுக தொண்டர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் கணவர் மாதவன் உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்து ஓபிஎஸ், ஈபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஜெ. தீபா தொடர்ந்து அதிமுக அரசை எதிர்த்து கருத்து கூறி வரும் நிலையில் அவருடைய கணவர் மாதவன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
அண்மையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஓராண்டு ஆட்சியை நிறைவு செய்ததையொட்டி அதிமுக தலைமை அலுவலகம் சென்று அவரை நேரில் சந்தித்து வாழ்த்திவிட்டு வந்தார் மாதவன் என்பது குறிப்பிடத்தக்கது.