ராஜாவை நீக்கியது சரி!... மறுபடியும் எப்போது சேர்ப்பார் தீபா? இதே வேலையா போச்சு!
Recommended Video
சென்னை: டிரைவர் ராஜாவை ஜெ தீபா கட்சியிலிருந்து நீக்கிவிட்டார் சரி, மீண்டும் எப்போது சேர்ப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் ராஜாவை நீக்குவதும், மீண்டும் சேர்ப்பதும் ஜெ தீபாவுக்கு வாடிக்கையாக போய்விட்டது.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ தீபா எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை தொடங்கினார். இதில் அவரது நண்பரும் கார் டிரைவருமான ஏ.வி. ராஜாவுக்கு முக்கிய பொறுப்பை வழங்கியிருந்தார். இதனால் தீபாவுக்கு கணவர் மாதவனுக்கும் இடையே பிரச்சினை எழுந்தது.
இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் போயஸ் தோட்டத்துக்கு வந்தார் தீபா. அப்போது சசிகலாவையும் தனது சகோதரர் தீபக்கையும் அவர் கடுமையாக விமர்சித்து பேசினார். அப்போது ராஜாவும் மாதவனும் உடனிருந்தனர்.
ஜனவரியில் நீக்கம்
இதனிடையே சாலையிலேயே மாதவனை தீபா கண்டபடி பேசுவதும் ராஜாவும் மாதவனை தகாத வார்த்தைகளால் பேசியதும் பார்ப்போரை முகம் சுளிக்க வைத்தது. இந்நிலையில் திடீரென ராஜா பேரவையின் கட்டுப்பாட்டை மீறி செயல்படுவதாக கூறி அவரை கட்சியிலிருந்து ஜனவரி 8-ஆம் தேதி நீக்கிவிட்டார்.
புதிய பதவி
நீக்கப்பட்டவர் அவ்வளவுதான் என்றிருந்த நிலையில் திடீரென பிப்ரவரி 2-ஆம் தேதி ராஜாவை மீண்டும் கட்சியில் இணைத்து கொள்வதாக தீபா அறிவித்தார். அதுவும் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையில் தலைமை நிலைய மாநில செயலாளர் என்ற புதிய பதவியுடன் வந்தார்.
இதே வேலைதான்
இந்நிலையில் இப்படியே உள்ளே வெளியே விளையாடிக் கொண்டிருந்த தீபா மறுபடியும் இன்றைய தினம் ராஜாவை கட்சியிலிருந்து நீக்குவதாக அதிரடியாக ஒரு அறிக்கையை வெளியிட்டார். இதை கேள்விப்பட்ட மக்கள் இவர்களுக்கு இதே வேலைதான் என சலித்து கொள்கின்றனர்.
ராஜாவை நீக்குவதும் சேர்ப்பதும்
கட்சி தொடங்கி இதுவரை மக்களுக்கு ஏதேனும் பிரயோஜனமாக தீபா செய்ததுண்டா. தனது பெயர் லைம்லைட்டில் இருக்க வேண்டும் என்பதற்காகவே மாதவனுடன் சண்டையிடுவதும் ராஜாவை நீக்குவதும் சேர்ப்பதுமாக இருக்கிறாரா என்ற கேள்வி எழுகிறது.
மக்கள் கருத்து
கடந்த முறை நீக்கப்பட்டு ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் சூப்பர் பதவியுடன் மீண்டும் சேர்த்துக் கொண்ட தீபா தற்போது அடுத்த மாதம் ராஜாவை மீண்டும் சேர்த்து கொள்ளமாட்டார் என்பது என்ன நிச்சயம். ஒரு சில விவகாரங்களுக்கு டுவிட்டரில் கண்டனம் போடுவதுடன் நிறுத்திக் கொண்டால் போதுமா. ஆர்ப்பாட்டம், போராட்டம் எதையாவது செய்வதுண்டா. அப்போதுதானே கட்சியின் பலம் மக்களுக்கும் மற்ற கட்சிகளுக்கும் தெரியவரும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.