சசிகலா கட்டுப்பாட்டில் அதிமுகவா?... ஏன் இப்படி சொல்கிறார் தீபா?
அதிமுக சசிகலா கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று ஜெ.தீபா சொல்கிறார்.
Recommended Video
சென்னை: அதிமுகவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ள தீபா அக்கட்சி சசிகலாவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா, ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அவரும் அரசியலுக்கு வந்தார். ஆனால் முழு நேர அரசியல்வாதியாக இல்லாமல் அவ்வப்போது வருகிறார், போகிறார்.
திடீர் திடீரென புகார்கள், சர்ச்சைகளைக் கிளப்பி விட்டு விட்டு மீண்டும் ஓய்வுக்குப் போய் விடுவார். இந்த நிலையில் தற்போது தனது பேரவையின் தொண்டர்களைச் சந்தித்து அவர் கருத்து கேட்டு வருகிறார்.
தனிக்கட்சி
தொண்டர்களைச் சந்தித்து வரும் அவர் 3 கேள்விகளைக் கேட்டு வருகிறார். ஜெ பாணியில் மக்கள் பணியைத்தொடர்ந்து அதிமுகவைக் கைப்பற்றி களப்பணி ஆற்றலாமா அல்லது ஓபிஎஸ் இபிஎஸ்ஸுடன் இணைந்து அதிமுகவில் இணைந்து பணியாற்றலாமா அல்லது தனிக் கட்சி தொடங்கி அரசியல் பணியாற்றலாமா என்று அவர் கேள்வி கேட்டு வருகிறார்.
அதிமுக யார் வசம்
கரூரில் இவர் இதுதொடர்பாக தொண்டர்களிடம் வாக்குச் சீட்டு கொடுத்து கருத்து கேட்டார். இந்த நிலையில் அதிமுக தொடர்ந்து சசிகலா வசமே இருப்பதாக புதிய தகவலை வெளியிட்டுள்ளார் தீபா.
சசி கட்டுப்பாட்டில் அதிமுக தலைவர்கள்
குறிப்பாக தம்பிதுரையை அவர் குறை கூறுகிறார். தம்பிதுரை, சசிகலா முதல்வராக வேண்டும் என்று ஆரம்பத்திலிருந்தே கூறி வந்தவர் என்பதை யாரும் மறக்க மாட்டார்கள் என்று கூறுகிறார் தீபா. அதிமுக தலைவர்கள் பலரும் சசிகலா கட்டுப்பாட்டில்தான் இருப்பதாகவும் கூறியுள்ளார் தீபா.
குட்டை குழப்பும் தீபா
தீபா ஏன் இப்படிக் கூறுகிறார் என்று தெரியவில்லை. அதிமுகவில் இணையும் விருப்பத்துடன் வலம் வரும் அவர் சசிகலா குடும்பத்தை இழுப்பது ஏன் என்று தெரியவில்லை. ஒரு வேளை உண்மையிலேயே சசிகலா தரப்பு அதிமுகவில் ஆதிக்கம் செலுத்துகிறதா அல்லது தினகரன், திவாகரன், சசிகலா மோதலை மேலும் அதிகரிக்க இப்படிக் குட்டையை குழப்புகிறாரா தீபா என்பது தெரியவில்லை.
தீபா நினைப்பு
அத்தைக்கு துரோகம் செய்தவர்கள் என்று தற்போதைய ஆட்சியாளர்களை குறை கூறும் தீபா அவர்களது கட்சியில் போய் சேருவாரா என்ன? இல்லாவிட்டால் யாராக இருந்தால் என்ன நாமும் எப்படி தான் முன்னேறுவது, பேசாமல் அண்ணன் ஓபிஎஸ்- ஈபிஎஸ்ஸை சந்தித்து சால்வை போட்டோமா, கட்சியில் சேர்ந்து ஒரு பொறுப்பை பெற்றோமா என்றிருப்பதுதானே புத்திசாலித்தனம் என்று தீபா நினைத்தாலும் நினைத்திருக்கலாம்.
மாதவன் இல்லை
இதற்கிடையே கரூரில் நடந்த தொண்டர்கள் சந்திப்பின்போது அவருடன் ராஜாவும் பங்கேற்றார். முதல் வரிசையில் தீபாவுக்கு ஒரு சீட் விட்டு அமர்ந்திருந்தார் ராஜா. ஆனால் கணவர் மாதவன் வரவில்லை. அட தீபாவின் கணவர் மாதவன் மனைவி கட்சியில்தான் இல்லையே என்கிறீர்களா அதுவும் சரிதான்.