சுயநினைவு இல்லை, காய்ச்சல், குணமாகினார்... அப்பப்பா ஜெ. குறித்து எத்தனை பொய்கள்- ஜெ. தீபா
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது எப்படி இருந்தார் என்பது குறித்து அனைவரும் பொய் கூறுகின்றனர் என்று தீபா குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது எந்த நிலையில் இருந்தார் என்பது குறித்து ஆளுக்கொன்று கூறுகின்றனர், ஆனால் அவை அனைத்துமே பொய்யான தகவலாகும் என்று தீபா குறிப்பிட்டுள்ளார்.
ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு உடல்நிலை குறைபாடால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் டிசம்பர் 5-ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மக்கள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து ஒய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷனை தமிழக அரசு அமைத்தது.
இரு பென்டிரைவ்கள்
அவர் கடந்த நவம்பர் மாதம் முதல் விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டபோது அவர் பேசியதாக ஆடியோ அடங்கிய இரு பென்டிரைவ்களை டாக்டர் சிவக்குமார், நீதிபதி ஆறுமுகசாமியிடம் ஒப்படைத்தார்.
திமுக புகார்
அந்த ஆடியோ நேற்று ரிலீஸானது. அதில் ஜெயலலிதா 52 நிமிடங்கள் பேசியது போல் இருந்தது. இத்தனை நாட்கள் இல்லாமல் நேற்று திடீரென ஜெயலலிதாவின் உணவு பட்டியல் மற்றும் ஆடியோவை அரசு வெளியிட்டது தூத்துக்குடி சம்பவத்தை மறக்கடிப்பதற்காக என திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன.
|
அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம்
இதுகுறித்து ஜெ.வின் அண்ணன் மகள் ஜெ.தீபா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், ஜெயலலிதா மருத்துவமனைக்கு வரும் போது சுயநினைவின்றி இருந்ததாக அப்பல்லோ நிர்வாகம் கூறியிருந்தது. இதை முன்னரே டாக்டர் சிவக்குமார் தெரிவித்திருந்தார்.
அனைவரும் பொய்யர்கள்
அதே அப்பல்லோ நிர்வாகம் ஜெயலலிதாவுக்கு லேசான காய்ச்சல் என்றது. அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டியோ ஜெயலலிதா மருத்துவமனைக்கு வரும் போது மோசமான நிலையில் வந்ததாகவும் அவரை பின்னர் குணமாகினார் என்றும் கூறியிருந்தது. ஆக மொத்தம் இவர்கள் அனைவருமே பொய் சொல்கிறார்கள் என்று தீபா பதிவிட்டுள்ளார்.