ராஜம்மாளுக்கு என்னை தெரியாதாம்.... தீபக்கை மட்டும் தெரியுமாம்... வேடிக்கையா இருக்கே...ஜெ.தீபா
ராஜம்மாளுக்கு என்னை தெரியாது, ஆனால் தீபக்கை மட்டும் எப்படி தெரியும் என்று ஜெ.தீபா கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: ராஜம்மாளுக்கு என்னை தெரியாது, ஆனால் தீபக்கை மட்டும் எப்படி தெரியும் என்று ஜெ.தீபா கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெயலலிதா மரண விவகாரம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த ஆணையத்தில் ஜெ.வுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அவருடன் நெருங்கி பழகியவர்கள் என 22-க்கும் மேற்பட்டோருக்கு ஆணையம் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி விட்டது.
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஜெ.வீட்டு சமையலர் ராஜம்மாளுக்கு சம்மன் அனுப்பப்பட்டு அவர் ஆஜராகினார். அப்போது அவர் ஜெ.தீபாவை யாரென்றே தெரியாது என்றும் அவரை போயஸ் தோட்டத்தில் இதுவரை பார்த்ததில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும் அவர் போயஸ் தோட்டத்தில் அவரை .யாரும் தாக்கவில்லை என்றும் அவர் கூறுவது போல் அடியாட்களும் இல்லை என்றும் ராஜம்மாள் வாக்குமூலம் அளித்திருந்தார்.
இதுகுறித்து ஜெ.தீபா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சமையல் வேலை செய்யும் ராஜம்மாள் உயிருக்கு பயந்தோ அல்லது ஆதாயத்திற்காகவோ என்னை தெரியாது என பொய் சொல்லியிருக்க வேண்டும். அவர் கடந்த 1996-இல் சசிகலாவால் நியமிக்கப்பட்ட வேலையாள். எனது அத்தையால் 1998-இல் போயஸ் கார்டனை விட்டு துரத்தப்பட்ட ராஜம்மாள் மீண்டும் சசிகலாவால் உள்ளே சேர்க்கப்பட்டார்.
நிச்சயம் ராஜம்மா கூறுவதில் துளி கூட உண்மை இல்லை. காரணண் என்னை யாரென்றே தெரியாது எனக் கூறும் அவர் என் சகோதரர் தீபக்கை தெரியும் எனக் கூறுவது வேடிக்கையாக உள்ளது. நானே ராஜம்மாவை 1996 காலகட்டத்தில் நேரில் பார்த்துள்ளேன். அவர்கள் ஒட்டுமொத்தமாக சேர்ந்து மக்களை முட்டாள் ஆக்க நினைக்கிறார்கள் என்பது இதிலிருந்து தெளிவாக தெரிகிறது.
இவர்களது முரண்பட்ட வாக்குமூலங்கள் மூலம் போயஸ் இல்லத்தில் ஏதோ தவறாக நடந்துள்ளது, என்பது தெளிவாகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கு ஏற்பட்ட நிலையை மக்களாகிய நீங்கள் என்னோடு சேர்ந்து கேள்வி கேட்க வேண்டும்.... அம்மாவின் மர்ம மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும்... இவர்களது நாடகத்துக்கு விரைவில் மூடு விழா நடத்தி துரோக கூட்டத்தை விரட்டியடிக்க வேண்டும் என்று தீபா கூறியுள்ளார்.