குண்டர் சட்டத்தில் கைதான மாணவி வளர்மதிக்கு ஆதரவாக போராட ஜெ.தீபா முடிவு
தமிழக விவசாயிகளுக்காக போராடிய சேலம் மாணவி வளர்மதியை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஜெ.தீபா,போராட்டம் நடத்தவும் தீர்மானம் செய்துள்ளார்.
சென்னை: விவசாயிகளுக்காக போராடிய சேலம் மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கு ஜெ.தீபா கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கு எதிராக போராட்டம் வெடிக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜெ.தீபா இன்று வெளியிட்டுள்ள வெளியிட்டுள்ள அறிக்கை
மீத்தேன் ஹைட்ரோ கார்பன் போன்ற மக்கள் அழிவுத் திட்டங்களை எதிர்த்துப் போராடிய மாணவி வளர்மதிய குண்டர் சட்டத்தில் கைது செய்திருப்பது கடும் கண்டனத்துக்குரியதாகும். மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய கதிராமங்கலத்தில் போராடிய மாணவி பேராசிரியர் உள்ளிட்டோர்
மீதும் கிராம மக்கள் மீதும் கிரிமினல் வழக்குகளை பதிவு செய்திருப்பதும் வேதனைக்குரியதாகும்.
ஏற்கனவே அம்மாணவியை திருச்சி சிறையில் அடைத்து வைத்து நிர்வாண சோதனை செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் ஆறு வாரங்களுக்குள் மாநில அரசு பதில் சொல்ல வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளுக்காகவும் வாழ்வாதாரத்திற்காகவும் போராடினால் சட்ட விரோதம் என அரசு கருதினால் ஒட்டுமொத்தத் தமிழ்சமூகம் ஒன்றுதிரண்டு அரசை தூக்கி எறியவேண்டிய காலம் வெகுதூரத்தில் இல்லை. சாது மிரண்டால் காடு கொள்ளாது.தமிழன் எழுந்து நின்றால் அனைத்து சர்வாதிகார சக்திகளும் தூள் தூளாக உடைத்து எறியப்படும்.
குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள மாணவி வளர்மதி, திருமுருகன் காந்தி உட்பட அனைவரையும் எவ்வித நிபந்தனையுமின்றி உடனே விடுதலை செய்திடுக. தொடர்ந்து அரசு தமிழின விரோதப்போக்கை கையாண்டால் மக்கள் சக்தியையும் அனைத்துக்கட்சியையும் திரட்டி எடப்பாடி பழனிசாமி கோட்டையிலிருந்து இறங்கும்வரை ஓயமாட் டோம். போராட்டம் வெடிக்கும் என்பதை எச்சரிக்கையாக தெரிவித்துக்கொள்கிறேன். என்று தீபா தெரிவித்துள்ளார்.