அத்தைக்காக போட்டியிடுகிறேன், எனக்கு வாக்களியுங்கள்... தீபா உருக்கம்!
அரசியலுக்காக இல்லாமல் தனது அத்தைக்காக போட்டியிடுவதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை : மற்றவர்களைப் போல அரசியலுக்காக போட்டியிடாமல் அத்தைக்காக போட்டியிடுகிறேன். 'அம்மா'விற்காக எனக்கு வாக்களியுங்கள், நான் நிச்சயம் மக்கள் நலனுக்காக பாடுபடுவேன் என்று ஜெ. தீபா தெரிவித்துள்ளார்.
சென்னை ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக எம்ஜிஆர் அம்மா ஜெயலலிதா பேரவையின் பொதுச் செயலாளர் ஜெ. தீபா இன்று மனு தாக்கல் செய்துள்ளார். வேட்பு மனு தாக்கலுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது :
கடந்த முறை நான் போட்டியிட்டதற்கும் இப்போது போட்டியிடுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. நாளை என்னுடைய அத்தையின் முதல் ஆண்டு நினைவு தினம்.
அம்மாவிற்காக ஒட்டு போடுங்கள்
அவருடைய தொகுதியில் நான் போட்டியிடுவதை தெய்வமாக இருக்கும் ஜெயலலிதா எனக்கு துணையாக இருப்பார். மற்ற அரசியல்வாதிகளைப் போல நான் அரசியல் யுக்திக்காக பயன்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. அத்தைக்காக நான் அரசியலுக்கு வந்துள்ளேன். அம்மாவிற்காக எனக்கு ஓட்டு போடுங்கள் என்று மக்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
சந்தேகம்
தேர்தல் முறையாக நடக்காது என்று பலருக்கும் சந்தேகம் இருக்கிறது. இரட்டை இலை வழங்கிய அடுத்த நாளே தேர்தல் அறிவிக்கப்படுகிறது. ஜனநாயம் தழைக்க வேண்டுமென்றால் ஆர்கே நகர் மக்கள் இவற்றையெல்லாம் புறக்கணித்துவிட்டு உண்மைக்கும், அம்மாவுக்கும் மட்டுமே வாக்களிக்க வேண்டும்.
எந்த சின்னமானாலும் பரவாயில்லை
கடந்த முறை எனக்கு படகு சின்னம் ஒதுக்கப்பட்டது, அதை கேட்டிருக்கிறேன். அதைத் தவிர வேறு எந்த சின்னத்தை ஒதுக்கினாலும் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்வேன்.
தேர்தல் ஆணைய செயல்பாடு
பல்வேறு நிகழ்ச்சிகள் இருந்ததால் வேட்பு மனு தாக்கலுக்கு இன்று தான் வர முடிந்தது. என்னுடைய வேறு பல நிகழ்ச்சிகளை ஒத்திவைத்துவிட்டு தான் வேட்பு மனு தாக்கலுக்கு வந்துள்ளேன். தேர்தல் ஆணையம் தனி அதிகாரம் பெற்ற ஆணையமாக செயல்பட வேண்டும். ஆனால் அது அவ்வாறு செயல்படவில்லை என்று தான் பலரும் குறை கூறுகின்றனர்.
மக்களுக்கு முடிந்ததை செய்வேன்
தேர்தல் வெளிப்படையாக நடந்தால், மக்கள் சிந்தித்து வாக்களித்தால் நிச்சயம் எனக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. என்னுடைய அத்தை வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களுக்காக வாழ்ந்தார். என்னால் முடிந்தவரை இந்த மக்களுக்கு செய்ய முடிந்தவற்றை செய்வேன் என்பது தான் ஆர்கே நகர் மக்களுக்கு நாள் அளிக்கும் தேர்தல் வாக்குறுதி என்றும் தீபா தெரிவித்தார்.