'வாணகிரை' வைரஸ்- டிஜிட்டல் இந்தியாவில் பாதுகாப்பு குறைபாடு இருக்கக்கூடாது... மோடிக்கு தீபா கோரிக்கை
'வாணகிரை' வைரஸ் தாக்குதல் குறித்த அதிக விழிப்புணர்வு கொள்ளவேண்டும் பிரதமர் மோடியை ஜெ.தீபா வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: டிஜிட்டல் இந்தியா திட்டத்தை மத்திய அரசு மிகப்பெரிய அளவில் நிறைவேற்றிவரும் நிலையில் 'வாணகிரை' வைரஸ் தாக்குதல் குறித்த அதிக விழிப்புணர்வு கொள்ளவேண்டும் என்று மத்திய அரசினை எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை அதிமுக ஜெ.தீபா அணி சார்பில் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை!
" டிஜிட்டல் இந்தியா திட்டத்தை மத்திய அரசு பெரிய அளவில் வலியுறுத்தும் நிலையில், வாணகிரை' வைரஸ் தாக்குதல் ஒவ்வொரு விதமாக வந்துகொண்டிருக்கிறது. இந்தியா, அமெரிக்கா, சீனா, தென்கொரியா என்று 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 2 லட்சம் கணிப்பொறிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
சந்தேக அலை
நம்முடைய தமிழகத்துக்கு அருகில்,பாலக்காட்டில், ரயில்வே அலுவலகக் கணினிகள் பாதிக்கப்பட்டு சரி செய்யமுடியாமல் அதிகாரிகள் சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த வைரஸ் தாக்குதல் உலகம் முழுக்க ஒரு சந்தேக அலையை ஏற்படுத்தியுள்ளது.
டிஜிட்டல் மாற்றம்
டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் காகிதமே இல்லாமல் சாதனைப் படைக்கப் போகிறோம் என்று கூறிவரும் நிலையில் , இந்திய வங்கித்துறை பெரும்பாலும் டிஜிட்டல் துறைக்கு மாறிவிட்டன. இந்த நிலையில் இவையெல்லாம் வைரஸ் தாக்குதலுக்கு அப்பாற்பட்டதா , அல்லது தாக்குதலுக்கு ஆளானாலும் மீண்டும் டேட்டாக்களை மீட்டெடுக்க கூடியதா தெரியவில்லை.
டெல்லி வங்கியில் ஹேக்கர்கள்
இந்தச் சந்தர்ப்பத்தில், டெல்லியில் ஒரு அரசு வங்கியிலிருந்து வெளிநாட்டு ஹேக்கர்கள் உள்ளே புகுந்து பல ஆயிரம் கோடி ரூபாயை தங்கள் கணக்குக்கு மாற்றியுள்ளனர். இந்தச் செய்தி பல மணிநேரங்களுக்குப் பிறகு அந்த வங்கி அதிகாரிகளுக்கு தெரிய வந்தது.
காப்பாற்றிய அமெரிக்கா
இது குறித்து மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, துரிதமாக அமெரிக்க FBI அதிகாரிகள் உதவியுடன் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்தத் தொகை பத்திரமாக மீட்கப்பட்டது. உலகின் எங்கோ ஒரு மூலையில் அமர்ந்துகொண்டு வங்கியின் பல ஆயிரம் கோடி ரூபாயைத் திருட முடியும் என்றால் நமது வங்கிகளின் பாதுகாப்பு அம்சம் எந்த அளவிற்கு உள்ளது என்று கேள்வி எழுகிறது. இதைப்போல பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் தீவிரவாதிகள் அவ்வப்போது மிக மிக சாதரணமாக இந்திய அரசுக்கு சொந்தமான பல துறைகளின் இணைய தளங்களை முடக்கி வருகின்றனர்.
தேவை டிஜிட்டலுக்கு பாதுகாப்பு
ஆகவே மத்திய அரசு, டிஜிட்டல் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மிகுந்த அக்கறையும் விரிவான அளவிற்கு ஏற்பாடு செய்திடவேண்டுமென மத்திய அரசை வேண்டுகிறேன்." என்று கூறியுள்ளார்.