மக்களால் இந்த அரசு, மக்களுக்காகவே இந்த அரசு... மறந்துவிட்டதா?.. தீபா கேள்வி
மக்களால் இந்த அரசு, மக்களுக்காகவே இந்த அரசு என செயல்பட்டதை நினைவில் கொண்டு போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என ஜெ.தீபா கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று தீபா பேரவையின் பொதுச் செயலாளர் ஜெ.தீபா கோரிக்கை விடுத்துள்ளார்.
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொங்கல் பண்டிகை கொண்டாடவுள்ள நிலையில் இந்த போராட்டத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து டுவிட்டரில் ஜெ.தீபா தனது பதிவில் கூறுகையில், கடந்த ஒரு வாரமாக போக்குவரத்து தொழிலாலர்களின் போராட்டத்தால் தமிழகத்தில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அன்றாடம் ஏழை, எளிய மக்கள், பல்லி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்வோர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்காலிக ஓட்டுநர்கள் நியமித்தல் போன்ர முடிவுகளால் ஆங்காங்கே சில விபத்துகளும், சரிவர பேருந்தை இயக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் அதிகமாக பயணம் மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
— J.Deepa (@JDeepaOfficial) January 10, 2018
நிலுவையில் உள்ள தொகையை வழங்க விரைந்து செயல்பட்டு, போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று போராட்டத்தை அரசு விரைந்து முடித்து வைக்க வேண்டும். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று தகுந்த நடவடிக்கைகள் மேற்கொண்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள அடிப்படை தேவையான பயணத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகளை களைய வேண்டும்.
ஜெயலலிதாவின் அரசு என அடிக்கடி இந்த அரசு கூறும் போது அவர் எப்போதும் மக்களால் இந்த அரசு, மக்களுக்காகவே இந்த அரசு என செயல்பட்டதையும் நினைவில் வைத்து துரிதமாக செயல்பட்டு பண்டிகை நாட்களில் போக்குவரத்து தொழிலாளர்களையும் பொதுமக்களையும் சந்தோஷத்துடனும் நிம்மதியுடனும் இருக்கச் செய்ய வேண்டும் என்று ஜெ. தீபா தனது பதிவில் கோரிக்கை விடுத்துள்ளார்.