ஜெ. மகள் என்று அம்ருதா பொய்வழக்கு.. உயர்நீதிமன்றத்தில் தீபக் அதிரடி மனு
ஜெயலலிதா மகள் என்று அம்ருதா பொய்வழக்குத் தொடர்ந்து உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் ஜெ.தீபக் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சென்னை: தான் ஜெயலலிதாவின் மகள் என்று அம்ருதா என்பவர் பொய்வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் ஜெ.தீபக் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
பெங்களூரைச் சேர்ந்த அம்ருதா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என்று வழக்குத் தாக்கல் செய்தார். இதனால் தமிழக அரசியல் சூழலில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் அந்த மனுவில், 'மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மகளாக கடந்த 1980-ம் ஆண்டு பிறந்தேன். மூன்று மாத குழந்தையாக இருந்தபோதே ஜெயலலிதாவின் சகோதரியான சைலஜாவிடம் ஒப்படைக்கப்பட்டேன். தற்போதுதான் நான் ஜெயலலிதாவின் மகள் என்பது உறவினர்கள் மூலமாக தெரியவந்தது.
என் தாயார் ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். அவரது இறுதிச்சடங்கு எங்கள் குல வழக்கப்படி நடைபெறவில்லை. எனவே, அவரது உடலை தோண்டி எடுத்து, குல வழக்கப்படி சம்பிரதாய சடங்குகளை செய்து மீண்டும் அடக்கம் செய்ய எனக்கு அனுமதி வழங்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், இந்த வழக்கில் தமிழக அரசு, சென்னை மாநகராட்சி மற்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, அண்ணன் மகன் ஜெ.தீபக் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை பிப்ரவரி 3ம் தேதிக்கு ஒத்திவைத்து இருந்தார்.
இந்நிலையில், நீதிபதி வைத்தியநாதன் முன்பு அரசுவழக்கறிஞர்கள் ஆஜராகி, இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரி இருந்தனர். இதனால் வழக்கு மீண்டும் பிப்ரவர் 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து ஜெயலலிதாவின் அண்ணன் மகன் ஜெ.தீபக் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், 'எனது அத்தை ஜெயலலிதாவின் சொத்துகளை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஜெயலலிதாவின் மகள் என்று கூறி அம்ருதா இந்த பொய்யான வழக்கை தொடர்ந்துள்ளார்.
ஜெயலலிதாவுக்கு சைலஜா என்ற சகோதரியே கிடையாது. என் பாட்டி சந்தியாவுக்கு, என் தந்தை ஜெயக்குமாரும், ஜெயலலிதாவும் தான் வாரிசுகள். எனவே அம்ருதா தாக்கல் செய்த இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்' என்று தெரிவித்து உள்ளார்.