பாமக நிறுவனர் ராமதாஸின் வலது கரமாக திகழ்ந்தவர் காடுவெட்டி குரு!
பாமக நிறுவனர் ராமதாஸின் வலது கரமாக திகழ்ந்தவர் காடுவெட்டி குரு!
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸின் வலது கரமாக திகழ்ந்தவர் காடுவெட்டி குரு உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார்.
காடுவெட்டி குரு என்றழைக்கப்படும் ஜெ.குருநாதன் எனும் குரு, கட்சி தொண்டர்களால் காடுவெட்டியார் என்றும் அழைக்கப்பட்டு வந்தார்.
தமிழக அரசியல்வாதி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னணித் தலைவராகவும், மாநில வன்னியர் சங்கத் தலைவராகவும் இருந்தார் காடுவெட்டி குரு.
ஜெயராமன் - கல்யாணி
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி கிராமத்தில் 1961ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி பெற்றோர் ஜெயராமன்-கல்யாணி தம்பதிக்கு மகனாக பிறந்தார் குரு.
முன்னாள் எம்எல்ஏ
2001ல் ஆண்டிமடம் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் மற்றும் 2011ல் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் வெற்றி பெற்று தமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றி்யுள்ளார் ஜெ.குரு.
ராமதாஸின் உறவினர்
இவர் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் இராமதாஸின் நெருங்கிய உறவினர் ஆவார். இரண்டுமுறை குண்டர் சட்டத்தில் கைதாகி சிறை சென்றவர்.
அப்பல்லோவில் சிகிச்சை
நுரையீரல் பாதிப்பால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்றுவந்தார். பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி, தினமும் மருத்துவமனைக்குச் சென்று, பார்த்து நலம் விசாரித்து வந்தார்.
தவறான தகவல்
பா.ம.க நிறுவனர் ராமதாஸ், மருத்துவமனைக்குச் சென்று குருவைப் பார்த்ததுடன், அவருக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் விசாரித்தார். அவரது உடல்நிலை குறித்து அவ்வப்போது தவறான தகவலும் பரவி வந்தது.
பேரிழப்பு
இந்நிலையில் இன்றிரவு மாரடைப்பு காரணமாக குருவின் உயிர் பிரிந்தது. பாமக நிறுவனர் ராமதாஸின் வலது கரமாக இருந்த குருவின் மரணம், பாமக மட்டுமின்றி வன்னியர் சமூதாயத்திற்கும் பேரிழப்பு.