தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது -ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்
செங்கல்பட்டு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது என்பதற்காக மக்கள் அஜாக்கிரதையாக இருக்கக் கூடாது என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
செங்கல்பட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை முறைகளை ஆய்வு செய்த அவர் செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார்.
அரசு அறிவித்ததைவிட 3 மடங்கு அதிக பலி.. அதிர வைக்கும் கொரோனா புள்ளி விவரம்.. அம்பலமான ஈரான்
நாளுக்கு நாள்
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்னும் ஆயிரங்களிலேயே தொடர்வதால், மக்கள் மத்தியில் ஒரு வித அச்சமும், பதற்றமும் நிலவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த அரசு தரப்பில் முழு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையிலும் நோயின் பரவலை இன்னும் முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.
படிப்படியாக குறைகிறது
இந்நிலையில் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் படிப்படியாக குறைந்து வருவதாகவும், அரசு விதிமுறைகளை மக்கள் கடைபிடித்தாலே கொரோனாவில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளமுடியும் எனவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா என்றாலே பீதியடையத் தேவையில்லை என்றும் ஆரம்பக்கால அறிகுறி தெரிந்தவுடன் அதற்கான சோதனைகளை நடத்தி உரிய சிகிச்சை எடுத்துக்கொண்டால் அதிலிருந்து மீளமுடியும் என நம்பிக்கை அளித்துள்ளார்.
வேண்டுகோள்
கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது என்பதற்காக மக்கள் அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது என்றும், முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும், அத்தியாவசிய பணிகளின்றி வெளியில் செல்வதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்டவைகளை பின்பற்றினாலே கொரோனா தொற்றை பெருமளவில் தடுக்க முடியும் என சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார்.
சிகிச்சை முறைகள்
முன்னதாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை விவரங்கள் மற்றும் முறைகளை கேட்டறிந்த அவர், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் பற்றியும் ஆய்வு நடத்தினார். இனி வரும் காலங்களில் தமிழகத்தின் மற்ற ஊர்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ஆய்வுக்கு செல்வார் எனக் கூறப்படுகிறது.